பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலையில் எரிவாயுக்கசிவு ஏற்பட்டதில் மூச்சுத்திணறி 9 பேர் உயிரிழந்துள்ளனர். வாயுக்கசிவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 7.15 மணியளவில் கயரஸ்புராவில் அமைந்துள்ள கட்டடத்தில் எரிவாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து லூதியானாவின் துணை மாஜிஸ்ட்ரேட் ஸ்வாதி கூறுகையில், “எரிவாயுக்கசிவு ஏற்பட்டதில் 11 பேர் மயங்கி விழுந்தனர். தீயணைப்புப் படையினர், போலீசார் மற்றும் என்டிஆர்எப் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இப்பகுதி எம்எல்ஏ ராஜீந்தர்பால் கவுர் கூறுகையில், “கட்டடத்தில் பால் சாவடி இருந்ததாகவும், காலையில் பால் எடுக்கச் சென்றவர் மயங்கி விழுந்ததாகவும் கூறினார். இதன் பிறகே இந்த சம்பவம் தெரியவந்தது. எந்த வாயு கசிந்தது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வரவில்லை” எனக் கூறியுள்ளார். வாயுக்கசிவால் அருகில் வசிக்கும் மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கசிந்த வாயு சுற்றியுள்ள 300 மீட்டர் அளவில் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.