Advertisment

85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

85 flight related issue

Advertisment

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் வாடிக்கையாகி வருகிறது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அனைத்தும் புரளி என்று கண்டயறிப்பட்டு வருகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்களின் பயண அட்டவணை மாற்றம், விமான ரத்து என விமான சேவைகள் பலவகைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், விமான பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதுடன், பயணிகள் மத்தியில் பீதியையும் உருவாக்கியுள்ளது.

இத்தகைய சூழலில் தான் இன்று (24.10.2024) ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஆகாசா ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் குறித்து புலனாய்வு அமைப்புகள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். இவ்வாறு மத்திய அமைச்சர் விளக்கம் அளித்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் விமான பயணிகள் பீதியடைந்துள்ளன. முன்னதாக விமான நிறுவனங்களுக்கு மிரட்டல்கள் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, ‘விமானங்களுக்கு மிரட்டல்களை விடுக்கும் நபர்கள் அடையாளம் காணப்பட்ட பிறகு, அவர்கள் இனி விமானத்தில் செல்ல தடை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்த மிரட்டல்களின் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்திருந்தார். ஒரு விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு அதன் பின்னர் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டுப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் சோதனைகள் நடத்தப்படுவதற்காக மூன்று கோடி ரூபாய் வரை செலவிடப்படுவதாக விமான நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக 170 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Fake flight Investigation issue NIA
இதையும் படியுங்கள்
Subscribe