
கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் ஏற்பட்ட 'ஏர் இந்தியா' விமான விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விபத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஏர் இந்தியா விமானங்கள் ஆய்வு உட்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு விடப்படுகிறது. அதேபோல சில ஏர் இந்தியா விமான பயணங்கள் திடீர் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி பயணிகளுக்கு கடும் அவதியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இன்று இந்தியா முழுவதும் சுமார் 8 ஏர் இந்தியா விமானங்கள் பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை- மும்பை, ஹைதராபாத்- மும்பை, சென்னை-துபாய், சென்னை-டெல்லி, மெல்போர்ன்-டெல்லி, துபாய்-ஹைதராபாத், டெல்லி-மெல்போர்ன் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேபோல தமிழகத்தில் சென்னையில் இருந்து பெருநகரங்களுக்கு செல்ல இருந்த 8 விமானங்களின் சேவைகள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் திடீரென நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 72 பயணிகளுடன் மீண்டும் சென்னையிலேயே தரையிறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா, ஸ்பைட்ஜெட் என சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு செல்லும் 4 விமானங்களும், சென்னை வர இருந்த 4 நான்கு விமானங்கள என மொத்தம் எட்டு விமானங்கள் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.