Skip to main content

ஆன்லைன் மோசடி; லட்சக்கணக்கில் இழந்த பணம் - 4  நாட்களில் 27 பேர் ஏமாற்றம் 

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

72 lakhs have been cheated from 27 people in online fraud in Puducherry

 

புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவருடைய பேஸ்புக் கணக்கிற்கு சிரியா நாட்டிலிருந்து ஒரு பெண் பேசுவது போன்ற அழைப்பு வந்துள்ளது. அவரும் அந்த அழைப்பை ஏற்று அவரிடம் பேஸ்புக் மெசேன்ஜ்ர் மூலமாகப் பேசிக்கொண்டு வந்திருக்கிறார். அவர் அமெரிக்காவில் இருந்து சிரியாவிற்கு வந்து வேலை செய்வதாகவும், இன்னும் 2 மாதங்களில் பணி ஓய்வு பெற இருப்பதாகவும், தன்னுடைய சேமிப்பு பணமான 4.5 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாகவும் அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்றும், அதில் ஒரு பகுதி பணத்தை இப்போது உங்களுக்கு பார்சல் வழியாக அனுப்புகிறேன் என்று கூறி பார்சல் அனுப்பியுள்ளார்.

 

அந்த பார்சல் இந்தியா வந்த பிறகு இந்திய ரிசர்வ் வங்கி, கொரியர் அலுவலகம், இந்திய தூதரகம், கஸ்டம்ஸ் போன்ற இடங்களில் இருந்து எல்லாம் அவருக்கு போனில் தொடர்பு கொண்டு பல்வேறு நடைமுறைகள் இருக்கின்றது அதற்காக வரி கட்ட வேண்டும் என்று சொல்லி அவரிடமிருந்து 13 தவணைகளில் 43 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை ஏழு வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தக் கூறியுள்ளனர். அவரும் அவ்வாறே செலுத்திய பிறகு கடந்த 2 மாதங்களாக அந்த சிரியா பெண்ணிடமிருந்து எந்த தகவலும் வராத காரணத்தினால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் கீர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

 

இதேபோல் புதுவையைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கொடுக்கிறோம் என்று டெலிகிராம் மற்றும் பேஸ்புக் மூலமாக புகழ்பெற்ற கம்பெனியிலிருந்து எச்.ஆர் மேனேஜர் பேசுவது போல் பேசியதை நம்பி 4,90,000 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்கள் சொன்ன பல்வேறு வங்கி கணக்குகளில் செலுத்திய பிறகு அவருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் ஏமாற்றத்தை உணர்ந்து புகார் கொடுத்துள்ளார். இதேபோல் கடந்த 4 நாட்களில் மட்டும் புதுச்சேரியைச் சேர்ந்த பலரும் இணைய வழி மூலமாக சுமார் 75 லட்சம் வரை இழந்துள்ளனர்.

 

இதுபற்றி சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் ஆய்வாளர்கள் கீர்த்தி, கார்த்திகேயன் ஆகியோர் கூறுகையில், “பெரும்பாலான மக்கள் இணைய வழி மோசடியில் சிக்கி பணத்தை இழப்பதற்கு காரணம் பேராசை தான். ஒரே நாளில் 10%, 20% பணத்தை  லாபமாக கொடுக்கிறோம் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் கூறுவதை நம்பி அவர்கள் சொல்லுகின்ற பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி இழக்கின்றனர். பண மோசடியில் ஈடுபடுகின்ற நபர்கள் பெரும்பாலும் அயல்நாடுகளில் இருந்து டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலமாகவே ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதால் முக்கிய குற்றவாளிகளைப் பிடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

 

பணத்தை இழந்தவர்கள் காலதாமதமாக வந்து புகார் கொடுப்பதால் வங்கி கணக்குகளை முடக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் செலுத்திய வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் பணத்தை மீட்பதும் பெரும் சவாலாக உள்ளது. பல்வேறு கவர்ச்சிகரமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நம்பி நன்கு படித்தவர்கள் கூட பல லட்ச ரூபாய் பணத்தை முகம் தெரியாத நபர்களுக்கு இணைய வழி மூலம் அனுப்பி ஏமாறுகின்றனர். அதேபோல் சந்தை மதிப்பை விட பொருட்கள் விலை குறைவாக கொடுக்கிறோம் என்று வரும் போலியான விளம்பரங்களை நம்பியும் பணத்தை இழக்கின்றனர். இணைய வழியில் வருகின்ற அனைத்து விளம்பரங்கள், முதலீட்டு அழைப்புகள், வேலைவாய்ப்பு,  குறைந்த விலையில் பொருளை தருகிறோம் என்ற அனைத்துமே இணைய வழி மோசடிக்காரர்களால் சோடிக்கப்பட்டவையே. பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மோசடிக்காரர்களிடம் இழக்க வேண்டாம். செல்போனுக்கு SMS, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்றவற்றில் வருகின்ற எந்த லிங்க்கையும் உள்ளே சென்று பார்க்க வேண்டாம். வெளிநாட்டு எண்களில் இருந்து வருகின்ற எந்த அழைப்பையும் ஏற்க வேண்டாம்” என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.