
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். 9 இடங்களில் இலக்குகளைக் குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இத்தகைய சூழலில் தான் ஜம்மு - காஷ்மீரின் எல்லைக் கிராமத்தில் நேற்று (08.05.2025) இரவு பாகிஸ்தான் நடத்திய கடுமையான தாக்குதலின் போது பொதுமக்களின் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து சேதமடைந்தன. பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் வாகனங்கள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. இந்நிலையில் காஷ்மீரின் சம்பா வழியாக ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 7 பேர் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் 7 பேரையும் சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 7 பேரின் இந்த முயற்சியானது முறியடிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான ட்ரோன்கள் மற்றும் ஏவுகனைகளை ஒரே நேரத்தில் ஏவி எல்லைப் பாதுகாப்பு படையினரின் கவனத்தை திசைத் திருப்பி விட்டு இதன் மூலம் ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 7 பேரும் இந்தியாவிற்கு நுழைய முயன்றுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தியாவுடனான எல்லையில் நிகழும் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டுப் போர் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு சர்வதேச நாடுகளிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக ராய்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.