ராணுவத் தளவாட பொருட்கள் தயாரிக்கும் நிறுவன வளாகத்தில் ஒரே நேரத்தில் ஐந்து சிங்கங்கள் புகுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் பிபாவப் நகரில் உள்ள ரிலையன்ஸ் ராணுவ தளவாட பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இரவு நேரத்தில் திடீரென ஐந்து சிங்கங்கள் வளாகத்திற்குள் படையெடுத்து வந்தது. இதனைக் கண்ட இரவு நேர காவலர் அதனை வீடியோ எடுத்ததுடன், கூட்டமாக சிங்கங்களை பார்த்தவுடன் தலைதெறிக்க ஓடினார். வனத்தை ஒட்டிய பகுதியில் உள்ள இந்த நிறுவனத்திற்கு இரைதேடி சிங்கங்கள் வந்திருக்கலாம் என அப்பகுதியினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், ஐந்து சிங்கங்கள் ஒரே நேரத்தில் வளாகத்தில் கம்பீரமாக நடந்து வரும் அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.