Skip to main content

தி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி! நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி!

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 
                                                   

2G case -again- against- DMK- shocked- by court- order

 

தி.மு.க.விற்கு எதிரான 2-ஜி வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை தினமும் நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது தி.மு.க மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


முந்தைய காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி அரசில் 2-ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரம் தி.மு.க.வுக்கு எதிராக ஊதி பெரிதாக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) தொடர்ந்த வழக்கில் தி.மு.க எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லியிலுள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், ‘’குற்றச்சாட்டுகளுக்கு உரிய எந்த ஆதார ஆவணங்களையும் சி.பி.ஐ.தாக்கல் செய்யவில்லை‘’ என்பதை சுட்டிக்காட்டி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அத்தனை பேரையும் விடுதலை செய்து கடந்த 2017-ல் தீர்ப்பளித்தது.  


மேலும், இந்த வழக்கை தொடர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகளைக் கண்டிக்கவும் செய்தது சி.பி.ஐ நீதிமன்றம். இந்த நிலையில், வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை. 


ஆனால், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீண்ட மாதங்களாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் மீண்டும் வழக்கை தூசு தட்டியது சி.பி.ஐ.! பிரதமர் மோடியின் உத்தரவின் படியே தி.மு.க.வுக்கு எதிராக இந்த வழக்கில் சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் தீவிரம் காட்டுகின்றன என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 


சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரிஜேஸ் சேத்தியிடம் கடந்த மாதம் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில், ‘’2 ஜி-க்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்திருந்தன. ஆனால், அரசியல் காரணங்களுக்காக இத்தகைய கோரிக்கை வைக்கப்படுகிறது என்கிற ரீதியில், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையின் கோரிக்கைக்கு எதிராக ஆ.ராசா. கனிமொழி உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். 


இதனை ஏற்க கூடாது என வலியுறுத்தி வாதம் செய்தது சி.பி.ஐ.! இரு தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சேத்தி, வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 29 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தார். அதன்படி இன்று தீர்ப்பளித்த நீதிபதி சேத்தி, ‘’2 ஜி வழக்கில் சி.பிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விரைவாக நடத்தி முடிக்க எந்தத் தடையும் கிடையாது. விரைந்து விசாரிக்கும் வகையில், அக்டோபர் 5-ஆம் தேதி முதல் தினமும் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும்‘’ என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டார். அதனால், அடுத்த வாரம் முதல் 2-ஜி வழக்கு மீண்டும் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தக் கூடும்!

 

Ad

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலிலும், தி.மு.க.தான் ஆட்சியை இந்த முறை கைப்பற்றும் என்கிற நிலையிலும் 2-ஜி வழக்கு மீண்டும் தூசு தட்டப்படுவது தி.மு.க.வை அதிர வைத்திருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சி.ஏ.ஜி.யில் 2ஜிக்கு இருந்த வார்த்தை தற்போது இல்லை” - அண்ணாமலை

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

 Annamalai says the word that was 2G in CAG.. is not present

 

சி.ஏ.ஜி அறிக்கையில் மத்திய அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்லியிருக்கிறார் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

நாகப்பட்டினம் தொகுதியில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் மோடி அரசின் ஊழல் அம்பலமாகியிருக்கிறது. எனவே ஊழல் எதிர்ப்பு பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை என்று கூறியிருந்தார். இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சி.ஏ.ஜி அறிக்கையால் மத்திய அரசின் ஏழு விதமான ஊழல் அம்பலமாகியிருக்கிறது என்று முதல்வர் அப்பட்டமாக பொய் சொல்லியிருக்கிறார்.

 

சி.ஏ.ஜி. அறிக்கையில், நெடுஞ்சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்துள்ளன என்றுதான் கூறியிருக்கிறதே தவிர, ஊழல், முறைகேடு, மோசடி அல்லது முதல்வர் சொன்ன துவாரகா விரைவு சாலை குறிப்பிட்ட நபர்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கீடு என்பது போன்ற வார்த்தைகள் எந்த இடத்தில் இடம்பெற்றிருக்கிறது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

 

துவாரகா விரைவு சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்ததற்கு, வடிவமைப்புத் திட்டங்களில் ஏற்பட்ட மாறுதல்தான் காரணம் என்று சி.ஏ.ஜி அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளது. 14 வழிச் சாலையில், 8 வழி மேம்பாலமாகவும், 6 வழி விரைவுச் சாலையாகவும் மாற்றப்பட்டுள்ளதால் செலவினம் அதிகரித்துள்ளது என்பது சி.ஏ.ஜி அறிக்கையிலேயே இருக்கிறது. எதற்காக இந்த மாறுதல் என்பதுதான் சி.ஏ.ஜி அறிக்கையின் கேள்வியே தவிர, ஊழலோ முறைகேடோ நடந்துள்ளது என்று அறிக்கையின் எந்தப் பக்கத்திலும் கூறப்படவில்லை. சாலைகள் அமைக்க நிலங்கள் கையகப்படுத்தும் செலவு, குறிப்பிடப்பட்டதை விட, இரண்டரை மடங்கு முதல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால், சாலை அமைக்கும் செலவும் உயர்ந்திருக்கிறது என்பதையும் சிஏஜி அறிக்கையே தெளிவுபடுத்தியிருக்கிறது.

 

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், சாலைகள் அமைக்க மூலப் பொருள்கள் கிடைப்பது தாமதமாவதால், சாலை அமைக்கும் பணிகள் தாமதமாகிறது என்று, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குற்றம் சாட்டினார். சாலை அமைப்பதற்கான பொருள்களில் விலையுயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசிடமும் கேட்டுக் கொண்டார். தமிழகத்தின் கனிம வளங்கள் கடத்தப்பட்டு, கேரளாவுக்கு அனுப்புவதில் தி.மு.க அமைச்சர்களுக்கே தொடர்பு இருப்பது பொதுமக்களுக்கே தெரிந்த உண்மை. மாநில வளர்ச்சிப் பணிகளுக்கு உதவாமல், கனிம வளங்களைத் திருடிக் கொண்டிருப்பவர்கள் மீது முதலமைச்சர் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?

 

சுங்கச் சாவடியில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறியிருக்கிறார் முதலமைச்சர். சுங்கச் சாவடிகளில் எப்படி ஊழல் நடக்கும் என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். உலக அளவில், ஊழலுக்கான அடையாளங்களாக விளங்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு, எதிலெல்லாம் ஊழல் செய்ய முடியும் என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே, சுங்கச் சாவடியில் என்ன ஊழல் நடந்திருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டியது முதலமைச்சரின் கடமை. மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவில் நிகழ்ச்சி நடத்த, மாநகராட்சி ஆணையரிடமே பணம் வசூலிக்கும் அவலத்தில் தமிழகத்தின் தலைநகரத்தை வைத்திருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், கவுன்சிலர்களும் சுங்கச் சாவடிகளிலும் இதுபோல் வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனரா?. 

 

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகப் போகிற போக்கில் முதல்வர் பேசியிருக்கிறார். ஒரே எண்ணில் பலரின் கணக்குகள் இணைக்கப்பட்டிருந்தால், அதனைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசிடமும் உள்ளது. மத்திய அரசு, ஒரே எண்ணில் பல கணக்குகள் இணைப்பது போன்ற தொழில் நுட்பக் குறைபாடுகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க, புதிய தொழில் நுட்பத்தை உறுதி செய்துள்ளது. ஆனால், ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள போலி கணக்குகளைச் சரி செய்ய வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு. அதனைச் செய்யத் தவறிவிட்டு, மத்திய அரசு ஊழல் என்று பேசியிருக்கிறார் முதல்வர். 

 

2ஜி ஊழல் குறித்த சிஏஜி அறிக்கையை அத்தனை எளிதாக நாட்டு மக்கள் மறந்துவிட மாட்டார்கள். ஊழல், முறைகேடு, மோசடி. அரசுக்கு இழப்பு என்ற வார்த்தைகள் அனைத்தும் இருந்தது 2ஜி ஊழல் குறித்த சிஏஜி அறிக்கை. எனவே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்துவதை, எக்காலத்திலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

“மோடி, அமித்ஷா என இருவரும் இந்தியாவில் இருக்க மாட்டார்கள்” - ஆ.ராசா சவால்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

“Neither Modi nor Amit Shah will exist in India” - A. Rasa

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் கோவையில் பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, “ஆட்சியில் இருக்கும் தனிமனிதர் ஒருவரால் அநீதி இழைக்கப்பட்டால் அதை இன்னொரு ஆட்சியில் சரி செய்துவிடலாம்; நீதிமன்றத்தில் நிவாரணம் பெறலாம் அல்லது போராட்டத்தின் வாயிலாக வெற்றி கொள்ளலாம். ஆனால் அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்துக்கொண்டு ஒரு கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தவறிழைக்கும் போது ஒரு நாடு ஸ்தம்பித்து போகிறது. அதையும் எதிர்கொள்ள சில தலைவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் நடைபெறும் காட்டாட்சியை எதிர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். 

 

வரும் 20 ஆம் தேதி நாம் திறக்க உள்ள கலைஞர் கோட்டத்தை திறக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வர உள்ளார். அவருக்கு அழைப்பிதழ் கொடுக்க நேற்று முன் தினம் பாட்னாவிற்கு சென்று அவருக்கும் துணை முதலமைச்சருக்கும் அழைப்பிதழ் வழங்கினேன். 20 நிமிடங்கள் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர், ‘இந்தியாவின் அரசியல் சட்டத்தை, அதில் சொல்லப்பட்டுள்ள மதச்சார்பின்மையை, சமதர்மத்தை, ஜனநாயகத்தை காப்பாற்றும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின். ஒட்டுமொத்த எதிர்க்கட்சித் தலைவர்களின் நம்பிக்கையும் மு.க.ஸ்டாலின் தான்’ என்று சொன்னார்.

 

கொங்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதற்கு செந்தில் பாலாஜியும் ஒரு காரணம் என்று எண்ணி இங்கு மிகச்சிறப்பாக செயல்பட்ட ஒரு அமைச்சருக்கு அமலாக்கத்துறை மற்றும் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் இந்த நெருக்கடி வந்துள்ளது. சிறு சிறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி ப.சிதம்பரத்தில் தொடங்கி அனைத்து தலைவர்களையும் இந்த கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். ஆனால் அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பெர்க் நிறுவனம் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. பிரதமரின் நண்பர் அதானி பிரதமரோடு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்கிறார். வெளிநாடுகளுக்கு சென்று அந்த நாட்டு பிரதமர்களுடன் அதானிக்கு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இவரே முன் நின்று கையெழுத்திடுகிறார். இது குறித்து ஹிண்டன்பெர்க் சொல்கிறது.

 

நாடாளுமன்றத்தில் இது குறித்து எதிர்க்கட்சிகளெல்லாம் கேள்வி கேட்டனர். பிரதமர் மௌனம் சாதித்தார். அப்படிப்பட்ட காட்டாட்சியை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள் கொங்கு மண்டலத்தில் சிறப்பாக செயல்படும் அமைச்சரை முடக்கிவிட்டால் தாமரை மலரும் எனக் கருதிக் கொண்டிருக்கிறீர்கள். கலைஞர் நூற்றாண்டு விழா ஓராண்டு முழுவதும் நடந்து கொண்டுள்ளது. அடுத்தாண்டு கலைஞர் நூற்றாண்டு விழாவை கோவையில் கொண்டாடுவோம். அப்போது இந்திய நாட்டின் பிரதமர் இங்கு இருப்பார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் இங்கு இருப்பார். 10க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் இந்தியாவின் எல்லா பகுதிகளில் இருந்தும் இங்கே வந்து கலைஞர் வாழ்க என முழங்குவார்கள். அப்போது மோடி, அமித்ஷா என இருவரும் இந்தியாவில் இருக்க மாட்டார்கள்” எனக் கூறினார்.