கணவர் மற்றும் மாமியார் தன்னை மனரீதியாக சித்ரவதை செய்வதாகக் கூறி 22 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்தவர் 22 வயதான அம்ரீன். இவர் நான்கு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கணவர் பெங்களூருவில் தங்கி வேலை செய்யவே, அம்ரீன் மொராதாபாத்தில் உள்ள தனது மாமனார் மற்றும் மைத்துனியுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அம்ரீன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர், அமிரீனின் தாய்க்கு தகவல் தெரிவித்தனர். இதை கேட்ட அலறி துடித்த தாய், தனது மகள் அம்ரீன் தற்கொலைக்கு மாமியார் தான் காரணம் என்று குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் அம்ரீன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த வீடியோவில், கணவர் மற்றும் மாமியார் ஆகியோரின் சித்ரவதையால் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோவில் அம்ரீன் கூறியதாவது, ‘கருச்சிதைவு ஏற்பட்டதில் இருந்து எனக்கு உடல்நிலை சரியில்லை. சில நேரங்களில், அவர்கள் என்னை ஏதாவது சுட்டிக்காட்டிப் பேசுவார்கள். இல்லையென்றால், எனது உணவுப் பழக்கத்தைப் பற்றி பேசுவார்கள். என் மைத்துனி கதீஜாவும், என் மாமனார் ஷாஹித்தும் தான் என் மரணத்திற்குக் காரணம். என் கணவருக்கும் இதற்கு பாதி பங்குண்டு. அவர் என்னை புரிந்துக் கொள்ளவே இல்லை. ஒவ்வொரு முறையும் நான் தான் தவறு செய்துவிட்டேன் என நினைக்கிறார். அவரது தந்தையும், சகோதரியும் அவரிடம் அடிக்கடி எதையோ சொல்கிறார்கள். இதனால், நான் சலிப்படைந்து விட்டேன். இனிமேல், என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது.
எனது கணவரும், மாமியாரும் நான் இறக்க வேண்டும் என விரும்புகின்றனர். ‘நீ ஏன் சாகக் கூடாது’ என என் கணவர் என்னிடம் கேட்டார். அவரது தந்தையும், சகோதரியும் அதையே கூறுகிறார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லாத போது சிகிச்சைக்கு பணம் செலுத்தியது தவறு என என் மாமியார் கூறுகிறார். மேலும், சிகிச்சைக்காக செலவழித்த பணத்தை திருப்பி கேட்கிறார்கள். எனக்கு எங்கிருந்து அவ்வளவு பணம் கிடைக்கும்?. என் கணவர் பணக்காரராக இருந்தால், அவர் உங்களிடம் கடன் கேட்பாரா?. பல நாட்களாக அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால், இனிமேல் முடியாது. எனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டேன். நான் இறக்கும்போது என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது இருப்பதை விட நான் நன்றாக இருப்பேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று வேதனையோடு தெரிவித்தார். இந்த வீடியோவின் அடிப்படையில், அம்ரீன் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.