ஒடிசா மாநிலத்தின் கோர்டா மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. ஆதரவாளர்கள் மீது சிலிகா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பிரசாந்த் ஜக்தேவ் என்பவரின் கார் வேகமாக சென்று மோதியது. இந்த விபத்தில், அங்கிருந்த காவலர்கள் உள்பட 22 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமான வகையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினரின் காரை கும்பல் ஒன்று தாக்கியது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் பிரசாந்த் ஜக்தேவ் பலத்த காயமடைந்தார். முதலில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆளும் பிஜு ஜனதா தள கட்சியைச் சேர்ந்த பிரசாந்த் ஜக்தேவ், கடந்த ஆண்டு பா.ஜ.க. நிர்வாகியைத் தாக்கியதற்காக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். மக்கள் மீது காட்டு மிராண்டித் தனமாக காரை ஏற்றிய சட்டப்பேரவை உறுப்பினரின் செயலுக்கு பிஜு ஜனதா தள கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்றும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது. அதேபோல், இச்சம்பவத்திற்கு பா.ஜ.க.வின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.