21 year young man passes away in manipur

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.

Advertisment

இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். பல மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

Advertisment

இந்த நிலையில் இன்று (25ம் தேதி) காலை மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள ஜூபி எனும் பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் 21 வயது இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள், மெய்தீய் மக்கள் அதிகம் வாழும் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் 8 கி.மீ. தொலைவில் உள்ள குக்கி இன மக்கள் அதிகம் வாழும் காங்போக்பி மாவட்டத்தின் ஜூபி எனும் பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. அதிகாலை சுமார் 2.45 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச் சூடு அதிகாலை 3.30 வரை நடந்துள்ளது. சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 21 வயது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் துவங்கிய கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதில் பொதுமக்கள் பரிதாபமாக பலியாகிக் கொண்டே இருக்கின்றனர்.