Skip to main content

வகுப்பறை பிரச்சனை: 10 ஆம் வகுப்பு மாணவனை சுட்டுக்கொன்ற சக மாணவன்!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

up

 

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டம் ஷிகார்பூரில், 10ஆம் வகுப்பு படித்து வந்த இரண்டு மாணவர்களிடையே அமருமிடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து அமர வைத்துள்ளார்.

 

இருப்பினும் ஆத்திரம் அடங்காத ஒரு மாணவன், துப்பாக்கியை எடுத்துவந்து தன்னிடம் தகராறில் ஈடுபட்ட மாணவனை மூன்றுமுறை சுட்டுள்ளான். இதில் அந்த மாணவனின் தலை, நெஞ்சு மற்றும் வயிற்றில் குண்டு பாய்ந்து உயிரிழந்தான். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன், வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே அங்கிருந்து ஓட முயல, அப்பள்ளியின் ஆசிரியர்கள் அவனை மடக்கிப் பிடித்து, துப்பாக்கியைப் பிடுங்கியதோடு போலீஸாரிடமும் ஒப்படைத்தனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீஸார், "துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன், விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் தனது (ராணுவத்தில் பணியாற்றும்) மாமாவின் துப்பாக்கியை எடுத்துவந்து, சக மாணவனை சுட்டதாகவும், அந்த மாணவனின் பையில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

 

துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, மாணவன் பயன்படுத்திய துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வகுப்பறையில் அமரும் இடம் தொடர்பான பிரச்சனையில், 10 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவனை சுட்டுக் கொன்றிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.