கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு தான் காரணம் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டிருந்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் கூடாரங்கள் குறிவைத்து இந்திய ராணுவத்தால் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஆகியோர் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி, ஜூலை 28ஆம் தேதியன்று, ஸ்ரீநகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான 3 நபர்கள் நடமாடுவதாக பாதுகாப்பு படைகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் ட்ரோன்கள் மூலமாக அவர்களை கண்காணித்து வந்தனர். அதில் இந்த மூன்று நபர்கள் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்பதும் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) என்ற பயங்கரவாத அமைப்பினுடைய சுலைமான் என்கிற பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சி அளிக்கப்பட்டவரின் தலைமையில் தான் இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் பாதுகாப்பு படையினர் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி, பயங்கரவாதிகளான சுலைமான், ஆப்கான் மற்றும் ஜிப்ரான் ஆகிய 3 பேரை கடந்த ஜூலை 28ஆம் தேதி பிடிக்க முயற்சித்த போது இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். ம்பந்தப்பட்டவர்கள், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தானா? என்பதை உறுதி செய்ய பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் ஜூலை 28ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் நடந்திருந்தது.
ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையால் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட மறுநாளே, ‘ஆபரேஷன் சிவசக்தி’ என்ற மற்றொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையால் மேலும் 2 பயங்கரவாதிகள், இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆயுதப்படைகள் தீவிரமாக களமாடி வருகின்றனர்.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட் நடவடிக்கைகளால் 100 நாட்களில் 12 மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொல்லப்பட்ட 12 பேரில், 6 பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்றும் மீதமுள்ளவர்கள் ஜம்மு காஷ்மீரில் நடந்த பெரிய பயங்கரவாத தாக்குதல்களில் நடந்த உள்ளூர்வாசிகள் என்றும் கூறப்பட்டுள்ளது. மே மாதத்தில் இருந்து பயங்கரவாதிகளை அழிக்க பல நிறுவனங்களில் பயிற்சிகள் தொடங்கப்பட்டது. அதில் மிக முக்கியமானது பஹல்காம் தாக்குதலை நடத்திய மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட ‘ஆபரேஷன் மகாதேவ்’ ஆகும் என்று கூறப்படுகிறது.