ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்திய பயங்கரவாத கும்பல், பாகிஸ்தானில் செயல்பட்டு வந்ததாலும், அந்த பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரிப்பதாகவும் கூறி பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா எடுத்தது.
அதில் முதன்மையாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய சிந்து நதிநீரை திறந்து விடுவதை இந்தியா நிறுத்தியது. பாகிஸ்தானில் வாழும் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக அமைந்திருக்கும் சிந்து நதிநீரை, இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் மக்கள் பெரிதும் பாதிக்கப்படைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்ததால் இந்த விவகாரம் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. சிந்து நநி நீர் நிறுத்ததை நாங்கள் போர் நடவடிக்கையாகவே எடுத்துக் கொள்வோம் என்று பாகிஸ்தான் பிரதமரே கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது. 3 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தாக்குதல் நிறுத்தத்திற்கு பிறகு, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் எதிராக எடுத்த நடவடிக்கைகளை திரும்ப பெற்றுக் கொண்டது. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த சிந்து நதி நீர் நிறுத்த நடவடிக்கையை மட்டும் இந்தியா திரும்ப பெறாமல் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய நீர் பகிர்வு ஒப்பந்தமான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது, இனி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்தால், அது பயங்கரவாதத்தையும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகளையும் பேச்சுவார்த்தையாக மட்டுமே இருக்கும் என்று கூறி பாகிஸ்தானின் கோரிக்கையை மறுத்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/26/tawiriver-2025-08-26-15-57-06.jpg)
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் வெள்ள அபாய எச்சரிக்கையை இந்தியா விடுத்துள்ளது. சமீப காலமாக இந்தியாவின் பல மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கனமழை காரணமாக இமய மலையில் உருவாகும் தாவி நதியில் அதிகளவு தண்ணீர் செல்வதால், அந்த தண்ணீர் ஜம்மு காஷ்மீர் வழியாக பாய்ந்து பாகிஸ்தானில் வெள்ளப் பெருக்கு உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ‘மனிதாபிமான அடிப்படையில்’ பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.