குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி (21.07.2025) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார். இதன் காரணமாகக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கான நடைமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இத்தகைய சூழலில் தான் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி (09.09.2025) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குடியத் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

Advertisment

இதனையடுத்து குடியரசு துணைத் தலைவரை நியமிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா அல்லது ஆளுங்கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகவும், எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி சார்பாகவும் தனித்தனி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருந்தது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் (17.08.2025) அறிவிக்கப்பட்டார். அதேசமயம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டனியின் சார்பில்  குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "பி. சுதர்ஷன் ரெட்டி இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முற்போக்கான சட்ட வல்லுநர்களில் ஒருவர். ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி, குவஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட நீண்ட மற்றும் புகழ்பெற்ற சட்டப் பணியை அவர் மேற்கொண்டுள்ளார்.

அவர் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிக்காக தொடர்ந்து மற்றும் துணிச்சலுடன் பாடுபட்டவர். அவரது, பல தீர்ப்புகளைப் படித்தால், அவர் ஏழை மக்களுக்கு எவ்வாறு ஆதரவளித்தார், அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தார் என்பதுத் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.