தேனி மாவட்டம், தேவாரம், கம்மனாய்க்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்மேகத்தின் மகன் பாண்டியன் (வயது 50). இவருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை இல்லாமல், திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் தங்கியிருந்து அங்கே உள்ள ஒரு பிரிண்டிங் பட்டறையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

Advertisment

இந்நிலையில், இன்று (ஜூலை 7, 2025) காலை, அம்மாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில், பாண்டியன் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், திருமுருகன்பூண்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisment

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  போலீசார், மேற்கொண்ட விசாரணையில் மது போதையில் இருந்த பாண்டியனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து  வழக்குப் பதிவு செய்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர், கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.