திருப்பூர் குன்னத்தூர் என்.ஆர்.கே.என். அரசு பள்ளி பள்ளி மாணவன் சம்பவத்தில் நடந்தது என்ன என திருப்பூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்கள் இருவரால் சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தப்பட்டு, தீ எரிந்து கொண்டிருந்த குப்பைக்குழியில் திட்டமிட்டு தள்ளப்பட்டதால் பலத்த தீக்காயம் ஏற்பட்டதாகவும், தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இந்த தகவல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காயமடைந்த சிறுவன் 13 வயதுடையவன் என்றும், மேற்குபதி பகுதியில் வசித்து வருவதுடன், குன்னத்தூர் என்.ஆர்.கே.என். ( NRKN) அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், காயமடைந்த சிறுவனும் சம்பந்தப்பட்ட மற்ற மாணவர்களும் ஒரே வகுப்பில் படித்து வருபவர்கள் என்றும், ஒருவரையொருவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் நண்பர்கள் என்றும் தெரியவருகிறது. பள்ளி நேரம் முடிந்த பிறகு, பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை சேகரித்து அதற்காக ஒதுக்கப்பட்ட குப்பைக்குழியில் போடுவது மாணவர்களின் வழக்கமான செயலாக இருந்து வருகிறது.
அதன்படி, நேற்று (30.01.2026) குப்பைகளை குப்பைக்குழியில் போடச் சென்றபோது, அந்தக் குப்பைக்குழியில் ஏற்கனவே தீ எரிந்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அச்சமயத்தில் மாணவர்கள் ஒருவரையொருவர் விளையாட்டாக தள்ளிக்கொண்டிருந்தனர். அவ்விளையாட்டின்போது, இரண்டு மாணவர்கள் காயமடைந்த சிறுவனின் கை மற்றும் கால்களைப் பிடித்து தூக்கி ஆட்டியதில், அவர் சமநிலையை இழந்து தவறி தீ எரிந்து கொண்டிருந்த குப்பைக்குழியில் விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உடனடியாக சக மாணவர்கள் காயமடைந்த சிறுவனை மீட்டு, தீக்காயம் ஏற்பட்ட இடங்களில் தண்ணீர் ஊற்றி முதலுதவி செய்து, அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். பின்னர், இச்சம்பவம் உடனடியாக ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/31/inves-2026-01-31-08-41-00.jpg)
மேற்படி சம்பவத்தில், எந்த நிலையிலும் காயமடைந்த சிறுவனை சாதி பெயரைச் சொல்லி திட்டவில்லை என்பதும், அவருக்கு காயம் ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் இல்லை என்பதும் தெளிவாகிறது. இச்சம்பவம் முழுமையாக விளையாட்டின்போது ஏற்பட்ட தற்செயலான நிகழ்வாகும். இதில் தீங்கிழைக்கும் அல்லது பாகுபாடு காட்டும் நோக்கம் எதுவும் இல்லை. ஆகவே, இதனை சாதிய கொடுமை சம்பவமாகக் கூறி சில ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானதும் தவறானதும் ஆகும். எனவே, பொதுமக்கள் இவ்வகையான பொய்யான மற்றும் தவறான தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/31/tn-police-inves-2026-01-31-08-40-15.jpg)