திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததால் சட்டக்கல்லூரி மாணவி ஒருவரை 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது மாணவி ஒருவர், தெற்கு கல்கத்தா சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் படித்து வந்த அதே கல்லூரியின் முன்னாள் மாணவரான மோனோஜித் மிஸ்ரா (31) என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாதிக்கப்பட்ட மாணவியை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், வேறு ஒரு நபரை காதலித்து வந்ததால் அந்த மாணவி அதனை ஏற்க மறுத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், கடந்த ஜூன் 25ஆம் தேதி தேர்வு தொடர்பான படிவங்களை நிரப்புவதற்காக அந்த மாணவி கல்லூரிக்கு வந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட மோனாஜித் மிஸ்ரா, தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் ஜைப் அகமது மற்றும் பிரமித் முகர்ஜி ஆகியோரை அழைத்து கொண்டு கல்லூரிக்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதனை நிராகரித்ததால் கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாவலரின் அறைக்குள் மாணவியை அடைத்து வைத்து மோனாஜித் மிஸ்ரா வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை தொடர்ந்து, மோனாஜித்துடன் வந்த மற்ற இரண்டு நபர்களும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து இது குறித்து யாரிடமாவது கூறினால் காதலனை காயப்படுத்திவிடுவதாகவும், பெற்றோர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவதாகவும் மாணவியை மிஸ்ரா மிரட்டியுள்ளார். அதன் பின்னர் அந்த பெண்ணை அங்கிருந்து வெளியேற அனுமதித்துள்ளார். அதனை தொடர்ந்து, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் பிரிவான திரிணாமுல் காங்கிரஸ் சத்ரா பரிஷத்தின் தெற்கு கொல்கத்தா மாவட்ட பிரிவின் பொதுச் செயலளராக பணியாற்றும் மோனாஜித் மிஸ்ரா மற்றும் ஜைப் அகமது மற்றும் பிரமித் முகர்ஜி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்னர், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் அலிப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.