கடந்த 14.08.2021 அன்று சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக வேளாண்துறை பட்ஜெட்டை வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வேளாண்துறைகளுக்கான பல்வேறு ஒதுக்கீடுகளை அமைச்சர் வாசித்தார். அதில் பனை மரம் மற்றும் அதனைச்சார்ந்த பொருட்களின் உற்பத்தி தொடர்பாக பல அறிவிப்புகளை வாசித்தார்.

Advertisment

பனைமரத்தின் பரப்பு வெகுவாக குறைந்து வருவதால், அதை அதிகரிக்க மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனை கன்றுகளும் கொடுக்கப்படும். பனை மேம்பாட்டு இயக்கம் தொடங்க முன்னெடுப்புகள் எடுக்கப்படும். ஒரு பனை மரத்தை வேரோடு அகற்ற வேண்டும் என்றால் கூட மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற வேண்டும். பனை வெல்லத்தை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பனைமரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற அரசாணையை இன்று (18/09/2025) தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பனைமரத்தை வேரோடு வெட்டி விற்கவும் செங்கல் சூளைக்கு பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க ஆட்சிகள் தலைமையில் மாவட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்ட நிலையில் தோட்டக்கலை உதவி இயக்குனரை தலைவராகக் கொண்டு வட்டார அளவிலான கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனி பனைமரத்தை வெட்டினால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.