திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ அவருடைய திருச்சி தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனுக்களை பெற்று தீர்வுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு தேவையான அரசின் அனைத்து சேவைகளையும் விரைவாகவும் எளிதாகவும் வெளிப்படைத் தன்மையோடும் அவர்களது இருப்பிடத்திற்கே கொண்டு சேர்க்கும் நோக்கில், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தைத் தொடங்கி நடைமுறை படுத்தி வருகிறார்.
இத்திட்டத்தின் கீழ், எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று (23.09.2025) காலை தொடங்கி நடைபெற்று வரும் முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டேன்.
இத்திட்டம், வருவாய், சமூகநலம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும், நகர்ப்புறங்களில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன.அதன்படி, இன்று திருச்சி மாநகராட்சி, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கூர், சோழமாதேவி மற்றும் பனையக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் இம்முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/23/a5335-2025-09-23-15-08-54.jpg)
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுடன் வேங்கூர் முகாமிற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகரக் கழகச் செயலாளரும் மண்டலக் குழுத் தலைவருமான மு.மதிவாணன் எம்.சி. அவர்களுடன் சங்கிலியாண்டபுரம் முகாமிற்கும் சென்று, பொதுமக்களைச் சந்தித்தேன்.
அப்போது, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் மற்றும் அவற்றிற்கு தீர்வு காணும் வழிமுறைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தேன்.
நானே நேரடியாக மக்களிடமிருந்து சில மனுக்களைப் பெற்று, உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்து, அவற்றிற்கு தீர்வு கிடைப்பதை உறுதி செய்தேன். “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதை நேரில் கண்டேன். மக்களின் பிரச்சனைகளை அவர்களது பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, விரைவாகவும் உரிய முறையிலும் தீர்வு காணும் இத்திட்டம், மக்கள் சேவையில் மிக முக்கியமான பங்காற்றி வருகிறது. இத்தகைய மகத்தான முயற்சியைக் கண்டு மகிழ்கிறேன்.
கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொகையா, மாவட்டச் செயலாளர் அண்ணன் வெல்லமண்டி இரா.சோமு, சகோதரர் மணவை தமிழ் மாணிக்கம், சகோதரர் டி.டி.சி.சேரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் உடனிருந்தனர்' என தெரிவித்துள்ளார்.