'I will not talk about Vijay anymore' - Premalatha Vijayakanth's plan Photograph: (dmdk)
அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டில் பேசியிருந்த நடிகர் விஜய், ''எம்ஜிஆருடன் தனக்கு பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எம்ஜிஆரை போன்றவர் விஜயகாந்த் அண்ணன். அவருடன் பழகுவதற்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. மதுரையிலிருந்து அவரைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது'' என பேசி இருந்தார்.
விஜய்யின் இந்த பேச்சு குறித்து தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், ''விஜய், விஜயகாந்தை அண்ணன் என்கிறார். நாங்கள் விஜய்யை தம்பி என்கிறோம் அவ்வளவுதான்'' என்றார்.
விஜய்க்கும் இதேபோல ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட்டி நீங்கள் கேள்விகளை விஜய்யிடம் வையுங்கள். ஏன் இப்பொழுது விஜயகாந்த்க்கு வாய்ஸ் கொடுக்கிறீர்கள். கட்சி ஆரம்பிச்சாரு அப்போதெல்லாம் சொல்லவில்லை. அவர் உடல்நலம் சரியில்லாத போதெல்லாம் சொல்லாதவர் இப்பொழுது விஜயகாந்தை அண்ணன் என சொல்கிறார் என்று சீமான் பேசுவதை பார்த்தேன். உலகம் அறிந்த உண்மையை சீமான் உரக்கச் சொல்லி இருக்கிறார். அதுதான் உண்மை. விஜய், விஜயகாந்தை அண்ணன் என்கிறார் எங்களைப் பொறுத்தவரை தம்பி என்கிறோம் அவ்வளவு தான்'' என்றார்.
இந்தநிலையில் விஜயகாந்த் குறித்து விஜய் பேசியது தொடர்பாகவும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி ஏற்படுமா? என்றும் தே.மு.தி.கவின் பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் செல்லும் இடமெல்லாம் செய்தியாளர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரேமலதா விஜயகாந்திடம் விஜய் குறித்தும், விஜய்யின் கட்சியுடன் கூட்டணி இருக்குமா என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி வருவதால் அதிருப்தி அடைந்த பிரேமலதா விஜயகாந்த் 'இனி எந்த இடத்திலும் விஜய் குறித்து பேச மாட்டேன்' என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.