பா.ம.க.வில்  அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் கும்பகோணத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நேற்று  (10.07.2025) நடைபெற்றது. இதில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ''ஐந்து வயசு குழந்தை மாதிரி நான் இருக்கேனாம். அப்படியென்றால் அந்த குழந்தை தான் மூன்று வருடத்திற்கு முன்பு உங்களை தலைவர் ஆக்கியது.  இப்பொழுது சொல்கிறேன் என் பெயரை யாரும் போடக்கூடாது. இன்சியல் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய பெயரை போடக்கூடாது. ஏனென்றால் என் பேச்சைக் கேட்கவில்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. உங்களை செயல் தலைவர் என்று தான் சொல்கிறோம். மக்களை சென்று பாருங்கள். மக்களுடன் மக்களாக வாழுங்கள். மக்களை பற்றி புரிந்து கொள்ளுங்கள். ஊர் ஊராக போங்கள்'' என்றார்.

இதனைத் தொடர்ந்து தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் இல்லாத நேரத்தில் நேற்று (10/07/2025) அன்புமணி ராமதாஸ் அவருடைய தாயார் சரஸ்வதியை சந்திப்பதற்காக வந்திருந்தார்.

இந்நிலையில் ராமதாஸ் இன்று (11/07/2025) செய்தியாளர்களை சந்தித்தார். 'அன்புமணி அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ''அதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்'' என பதிலளித்த ராமதாஸ், ''இரண்டு என்றால் இரண்டும். செய்தியாளர்கள் யாரும் சரியாக கேள்வி கேட்க மாட்டேன் என்கிறீர்கள்'' என்றார்.

Advertisment

'திமுக கூட்டணியில் நீங்கள் சேர இருப்பதாகக் கூறப்படுகிறது' என்ற கேள்விக்கு, ''நேற்று 10 காக்கைகள் பறந்தது. அதில் ஐந்து காக்கா வெள்ளை காக்கா. அந்த வெள்ளை காக்காதான் உங்களுக்கு சொல்லி இருக்கும் என்று நினைக்கிறேன். சரியா'' என்றார்.

'அப்பொழுது அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா?' என்ற கேள்விக்கு, ''இங்கு எத்தனை கட்சிகள் இருக்கிறது. மொத்தம் 49 கட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்றைக்கு யார் கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியவில்லை. புதிதாக ஆரம்பித்து இருந்தால் நீங்கள் என்னிடம் இங்கே இருந்திருக்க மாட்டீர்கள். அங்கே போயிருப்பீர்கள்''என்றார்.

'தமிழகத்திற்கு கல்வி நிதியை மத்திய அரசு தர மாறுகிறது' என்ற கேள்விக்கு,''வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது. நான் கேட்டு வாங்குவேன். பிரதமர் என்னுடைய நண்பர். கேட்டுதான் வாங்க வேண்டும். தட்டுங்கள் திறக்கப்படும். கோவில் நிலம் அதிகமாக இருந்தால் அதில் கல்லூரி கட்டுவதெல்லாம் தவறில்லை'' என்றார்.