தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை (13.09.2025 - சனிக்கிழமை) அன்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காகத் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே விஜய் பேசுவதற்கு தவெகவினர் அனுமதி கேட்டிருந்த நிலையில் போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர்.
திருச்சி காந்தி மார்க்கெட்மரக்கடை பகுதியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதே சமயம் 23 நிபந்தனைகளை போலீசார் விஜய்க்கு விதித்துள்ளனர். ரோட் ஷோ நடத்தக்கூடாது, அதிகப்படியான வாகனங்கள் பின் தொடர்ந்து வரக்கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது, ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும், அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது, விஜய் வாகனத்தில் அமர்ந்தவாறு தான் செல்ல வேண்டும். பிரச்சாரம் நிறைவுபெறும் பகுதியான மரக்கடை பகுதியில் 20 முதல் 30 நிமிடம் வரை விஜய் பேசலாம் உள்ளிட்ட 23 நிபந்தனைகளை விதித்து காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். காவல்துறையின் இந்த 23 நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்வதாக தவெக கட்சியினர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
திருச்சி தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் விஜய் நாளை பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அரியலூரில் அவர் பிரச்சாரம் செய்வதற்காக அக்கட்சியினர் அனுமதி கேட்டு இருந்தனர். இந்நிலையில் அரியலூர் பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரம் மேற்கொள்ள அவருக்கு போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' இறைவன் அருளால், இயற்கையின் துணையால் உங்கள் அனைவரின் பேரன்பால் நம்முடைய இந்த மக்கள் சந்திப்புப் பயணம் மகத்தான வெற்றி பெறும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் "உங்க விஜய். நான் வரேன்"' என தெரிவித்துள்ளார்.