தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் கடந்த 21ஆம் தேதி (21.07.2025) ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தியதால் அவரின் திருப்பூர் பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர், அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிவில், கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை!

உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!' என நெகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார்.