தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் இருந்து 42 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து ஒன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று முன் தினம் (23.10.2025) இரவு புறப்பட்டது. அதன்படி இந்த பேருந்து நேற்று (24.10.2025) அதிகாலை ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது இரு சக்கர வாகனம் ஒன்று பேருந்து மீது மோதியது. இதனால் பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அச்சமயத்தில் பேருந்து வேகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில் தீயானது பேருந்து முழுவதும் வேகமாக திடீரென்று பரவியது. 

Advertisment

இதனால் பேருந்து முழுவதுமாக பற்றி எரியத் துவங்கியது. அதே சமயம் அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். மற்றொரு புறம் பேருந்தில் இருந்த ஓட்டுநர், நடத்துநர் ஆகிய இருவரும் விழித்துக் கொண்டிருந்த நிலையில் தீ பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகளை எழுப்பி வெளியேற்ற முயன்றனர். இருப்பினும் பேருந்து முழுவதுமாக பற்றி எறிந்து பயணிகளுக்கு மூச்சு திணல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பேருந்தில் இருந்த 42 பயணிகளில் 15 பயணிகள் மட்டும் பேருந்தின் அவசரக் கால வழியைப் பயன்படுத்தி வெளியே குதித்து உயிர் தப்பினர். மற்ற பயணிகள் பேருந்தில் சிக்கிக் கொண்ட நிலையில் 20 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகத் தெரிய வந்துள்ளது.  

Advertisment

இதற்கிடையே இந்த தீ விபத்து  குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேர்ந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் பேருந்தில் எரிந்து கொண்டிருந்த தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர். மேலும் பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ வித்தில் சிக்கி 20 பேர் பலியான சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தீ விபத்தில் உயிரிழந்த 20 பேரில் திருப்பூரைச் சேர்ந்த ஒரு இளைஞரும் ஒருவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் தள்ளு வண்டியில் வெங்காய வியாபாரம் செய்து வரும் லட்சுமி  என்பவரது இளைய மகன் யுவன் சங்கர் ராஜா (வயது 22). இவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவ ஆய்வகத்தில் பணி புரிந்து வந்தார். இவர் தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை கிடைக்காத சூழ்நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பெற்றோரைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டு ஆம்னி பேருந்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு உறக்கத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த யுவன் சங்கர் ராஜாவின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.

Advertisment