புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகத்திற்கு உட்பட்டது நல்லாண்டார்கொல்லை கிராமம். இது ஒ.என்.சி.சி. எண்ணெய் கிணறு அமைத்த கிராமம் ஆகும். இங்கிருந்து தான் நெடுவாசல் போராட்டம் முளைத்தது. இந்த ஊரைச் சேர்ந்த முத்தையா மகன் ரெங்கதுரைக்கு (வயது 40) திருமணமாகி யோகா என்ற மனைவியும் அஸ்வந்த் (வயது 4) என்ற மகனும் உள்ளனர். ரெங்கதுரை பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்தவர் ஆவார்.
தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்த மாதம் 14ஆம் தேதி மீண்டும் வெளிநாடு செல்ல தயாராக இருந்துள்ளார். இந்நிலையில் தான் ரெங்கதுரை மீண்டும் வெளிநாடு போக வேண்டாம் என்று அவரது மனைவி கூறியதால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகா தன் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவர் செல்லும் போது ரெங்கதுரையின் கடவுச்சீட்டு மற்றும் பணம் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளார். இதனால் சாப்பாட்டிற்கே தடுமாறிய ரெங்கதுரை மனைவியிடம் கடவுச்சீட்டை கேட்ட போது அதை எரித்துவிட்டதாக கூியுள்ளார்.
தான் மீண்டும் வெளிநாடு போக முடியாதே என்ற மன உளைச்சலில் இருந்தவர் நேற்று (31.08.20250 இரவு தனது வீட்டின முதல் மாடிக்கு தூங்கப் போனவர் இன்று (01.09.2025 - திங்கள் கிழமை) காலை வரை கீழே வராததால் அவரது தாயார் சென்று பார்த்த போது ரெங்கதுரை விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வடகாடு போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று ரெங்கதுரை உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவர் இறந்த நிலையில் ஊருக்கு வந்த மனைவி நான் கடவுச்சீ்ட்டை எரிக்கவில்லை என்னிடம் தான் உள்ளது என்று கதறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். கணவன் வெளிநாடு செல்லக்கூடாது என்பதற்காக அவரது கடவுச்சீட்டை எடுத்து மறைத்து வைத்த மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதால் மனம் நொந்த கணவன் தற்கொலை கொண்ட துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.