கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு அருகே உள்ள மரபேட்டை வீதியைச் சேர்ந்தவர் இளைஞர் பாரதி. 29 வயதான இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். பாரதியும் அதே ஊரைச் சேர்ந்த 27 வயது இளம்பெண்ணான ஸ்வேதாவும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 9 வயது மகனும், 7 வயது மகளும் உள்ளனர். நன்றாகப் போய்க்கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் திடீரென அரங்கேறிய ஒரு சம்பவத்தால் அந்த ஊரே நடுங்கியது.
நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த கணவன் - மனைவி உறவில் திடீரென கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனால், பாரதியும் ஸ்வேதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நாளுக்கு நாள் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை ஒரு கட்டத்தில் பூதாகரமாக வெடித்து, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஸ்வேதா தனது கணவர் பாரதியை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்குச் சென்றார்.
இதற்கிடையில், கணவரை விட்டு பிரிந்த ஸ்வேதாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்து வந்ததாக பேச்சு எழுந்தது. அதே நேரம், இதனால் ஏதோ காரணமாகவே ஸ்வேதா தனது குழந்தைகளுடன் ஏபிடி ரோடு, பழனியப்பா வீதியில் உள்ள வாடகை வீட்டில் தனியாகக் குடியிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த பாரதி, மனைவி ஸ்வேதாவை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு வாக்குவாதம் செய்து வந்தார். ஆனால், ஸ்வேதா “நான் உன்னுடன் சேர்ந்து வாழ மாட்டேன்” என்று கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கொலைவெறிக்கு ஆளான பாரதி, தனது கோபத்திற்கும் சந்தேகத்திற்கும் தன் காதல் மனைவியையே பலியாக்க துணிந்தார். இந்நிலையில், பாரதி இன்று (9, 2025) காலை 9 மணியளவில் ஸ்வேதா தங்கியிருந்த வீட்டின் அருகே மறைந்திருந்தார். அப்போது, ஸ்வேதா வேலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, பாரதி அவர் வழியை மறித்து கடுமையாக வாக்குவாதம் செய்தார். ஆனால், அதைப் பொருட்படுத்தாத ஸ்வேதா தனது கணவரை திட்டிவிட்டு வேலைக்குச் சென்றார்.
அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த பாரதி, தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்வேதாவை சரமாரியாகக் குத்தி கிழித்தார். பட்டப்பகலில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதி மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும், விடாமல் பாரதி “நீ சீக்கிரம் செத்துப்போ” என்று சொல்லிக்கொண்டே மனைவி ஸ்வேதாவை கொடூரமாகத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஸ்வேதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதன்பிறகு, அங்கு வந்த ஏராளமான மக்கள் தப்பியோட முயன்ற பாரதியைப் பிடித்து வைத்துக் கொண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பாரதியை கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.