husband hit by his Wife and her lover and then pretending to be an accident
ராஜஸ்தான் மாநிலம், கங்கா நகர் மாவட்டம் ராவ்லா பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிஷ் (25). இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில், அஞ்சலி ஆஷிஷை நடைப்பயிற்சி செல்வதற்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆஷிஷ், விபத்தில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆஷிஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவ இடத்தில் மயங்கிக் கிடந்த அஞ்சலியையும் மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆஷிஷ் விபத்தில் இறந்ததாக அஞ்சலி தெரிவித்தார். இருப்பினும் பிரேதப் பரிசோதனையில் ஆஷிஷ் விபத்தில் இறக்கவில்லை என்றும் மாறாக அவர் கடுமையாகத் தாக்கப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்டும் இறந்துள்ளதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, மீண்டும் அஞ்சலியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சில திருடர்கள் தங்களைத் தாக்கிவிட்டு, நகைகளைப் பறித்துச் சென்றுவிட்டதாகத் தெரிவித்தார். ஏற்கனவே கூறிய கருத்தும், தற்போது தெரிவித்துள்ள கருத்தும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த விசாரணையில், அதிர்ச்சிகர தகவல்கள் வெளியானது. அதாவது, அஞ்சலி திருமணத்திற்கு முன்பே சஞ்சய் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இந்த பழக்கம் திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து வந்துள்ளது. இதனால், இவர்கள் அடிக்கடி ரகசியமாகச் சந்தித்து வந்துள்ளனர். இதனால் ஆஷிஷ் தங்களது காதலுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அவரை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி ஆஷிஷை நடைப்பயிற்சி செல்வதாகக் கூறி அழைத்துச் சென்று, அங்கு சஞ்சய், அவரது நண்பர்கள் ரோஹித் மற்றும் சித்தார்த் ஆகியோர் சேர்ந்து கட்டைகளாலும், கம்பியாலும் ஆஷிஷை தாக்கி, பின்னர் துணியால் அவரது கழுத்தை இறுக்கிக் கொன்றுள்ளனர்.
இதன் பின்னர், அவர்களிடத்தில் தங்களின் செல்போன் மற்றும் நகைகளைக் கொடுத்துத் தப்பிச் செல்லுமாறு அஞ்சலி கூறியுள்ளார். பின்னர் மயங்கி விழுந்தது போல் நடித்து, தங்கள் மீது கரை விட்டு மோதுமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து, மர்ம நபர்கள் தங்கள் நகைகளைப் பறித்துக்கொண்டு, காரால் மோதிவிட்டுச் சென்றதாகக் கூறி நாடகமாடியுள்ளார். இதையடுத்து அஞ்சலி, சஞ்சய், ரோஹித் மற்றும் சித்தார்த் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow Us