உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ராம் சிங் பரிஹார் என்பவர் வசித்து வந்தார். இவர் இரண்டு திருமணம் செய்து கொண்டவர். அவரது முதல் மனைவி ப்ரீதி (35) சிப்ரி பஜார் பகுதியிலும், இரண்டாவது மனைவி கீதா அதே நகரத்தில் உள்ள சிட்டி கோட்வாலி பகுதியிலும் வசித்து வந்தனர். இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் பரிஹார், தனது மூத்த மனைவியைக் கொன்று அவரது உடலை ஒரு உலோகப் பெட்டியில் அடைத்து வைத்துள்ளார். சில நாட்கள் விறகுகளை சேகரித்து அந்த உடலை பெட்டியினுள் வைத்து எரித்துள்ளார். இந்தக் குற்றத்திலிருந்து தப்புவதற்காக தடயங்களை அழிக்க முயன்றுள்ளார். அதன் காரணமாக, உடலை எரித்த சாம்பலை ஒரு சாக்கு பையினுள் அடைத்து அதனை ஒரு ஆற்றங்கரையில் வீசியுள்ளார். மீதமுள்ள எரியாத பகுதிகள் மற்றும் எலும்புகளை பெட்டியினுள் வைத்து அடைத்துள்ளார். பெட்டியில் இருந்த அவரது உடலின் மீதமுள்ள பாகங்களை அப்புறப்படுத்த, அதை தனது மனைவி கீதாவின் வீட்டிற்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டார்.

Advertisment

இதற்காக கடந்த 17ஆம் தேதி இரவு, பரிஹார் தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகன் நிதினை அழைத்து பெட்டியை வீட்டிற்கு எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி, அந்த உலோகப் பெட்டியை கீதாவின் வீட்டிற்கு கொண்டு செல்ல ஒரு சுமை ஏற்றும் வாகனத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். நிதினும் அவரது சில நண்பர்களும் அந்தப் பெட்டியை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனை கண்ட வாகன ஓட்டுநர் ஜெய்சிங் பாலுக்கு, பெட்டியினுள் உள்ள பொருள் மற்றும் அந்த நபர்களின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் சொன்ன இடத்தில் பெட்டியை இறக்கிய பிறகு, ஓட்டுநர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார்.

Advertisment

தகவல் அறிந்து கீதாவின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர்,  சந்தேகத்திற்குரிய அந்த பெட்டியை திறந்து பார்த்தனர், அதில் கருகிய மனித உடற்பாகங்கள், எலும்புகள் மற்றும் நிலக்கரி போன்ற பொருட்கள் இருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் , கிடைக்கப்பெற்ற தடயங்களை அடுத்த கட்ட  விசாரணைக்காக தடயவியல் குழுவினர் சேகரித்து வைத்துள்ளனர். இதையடுத்து பரிஹாரின் இரண்டாவது மனைவியின் மகனான நித்தின் மற்றும் உடன் இருந்த நபர்களை காவல் துறை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான பரிஹாரை காவல் துறை தீவிரமாக தேடி வருகிறது.

இந்த நிலையில், இந்தக் கொலை கடந்த ஜனவரி 8 ஆம் தேதி அன்று நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். பரிஹரின் முதல் மனைவி பல லட்சக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்டு, மேலும், அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த கொலை நடந்திருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment