கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கீழில்லம் பகுதியை சேர்ந்தவர் லைஜு. இவருக்கு ஜிபிமோல் (37) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். அப்பகுதியில் லைஜு, உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதனிடையே, நீண்ட நாட்களாகவே மனைவி ஜிபிமோலின் நடத்தையில் லைஜுவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி மீண்டும் இது சம்பந்தமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லைஜு, ஜிபிமோலின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், லைஜு பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். அவ்வாறு செல்லும் போது, அந்த பகுதியில் வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மீது பைக்கை மோதினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இதனிடையே, அவர் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, பைக்கை பேருந்து மீது மோதியுள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.  மறுபுறம், அவரது இரு பிள்ளைகளும் தாயார் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். கத்தி கதறிய அவர்கள் இது குறித்து அண்டை வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தகவல் அறிந்து வந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் காரணமாகக் கணவன் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment