திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள சைக்கா தெருவைச் சேர்ந்தவர் நசீர் ஹுசேன் (வயது 35). இவர் கோயம்புத்தூர் பகுதியில் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முகமது அஸ்மா. இத்தகைய சூழலில் முகமது அஸ்மா கருவுற்றார். இதனையடுத்து மேலப்பாளையம் நகர்நல மையத்தில் தொடர்ந்து  மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று வந்துள்ளார். இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று (06.02.2026) பிரசவ நாள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Advertisment

இருப்பினும் முகமது அஸ்மா மருத்துவமனைக்கு அவர் வராத நிலையில் மருத்துவ அலுவலர் சுமதி நேரில் அவரது வீட்டுக்குச் சென்று மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் இந்த தம்பதியினர் மருத்துவமனைக்கு  வர மறுத்துள்ளனர்.  இதனையடுத்து  நேற்று இரவு முகமது அஸ்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது அவரது கணவர் நசீர் ஹுசேன், பிரசவம் பார்த்துள்ளார். இதில் குழந்தை இறந்த நிலையிலே பிறந்துள்ளது. இதனையடுத்து, இறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் அந்த பகுதியிலேயே புதைத்துள்ளனர். 

Advertisment

இது தொடர்பான தகவல் அப்பகுதி மக்களிடையே பரவியது. அதோடு மருத்துவ அலுவலர் சுமதியின் கவனத்திற்கும் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவ அலுவலர் மேலப்பாளையம் போலீசில் இது குறித்து இன்று (07.02.2026) காலை புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் நசீர் ஹுசேனை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக நசீர் ஹுசேனிடம் காவல் துறையினர் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

siren-arrested

இதற்கிடையே முகமது அஸ்மா, மருத்துவமனைக்கு வர மறுப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது அவரை மருத்துவமனைக்கு வர அழைத்துச் செல்வதற்கு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து இடையூறு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. வீட்டில் வைத்து இயற்கை முறையில் மனைவிக்குப் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த நிலையில் கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment