'How much mental anguish Vijay's dance must have caused to all 41 families' - AIADMK Jayakumar interview Photograph: (admk)
தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நேற்று (02.02.2026) காலை கொண்டாடப்பட்டது .இதனையொட்டி நேற்று அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டு துவக்க விழா அக்கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்றது.
இந்த விழாவின் போது தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும், பா.ஜ.க தலைமையில் மற்றும் பலர் என்றும் ஊழல் கட்சி என்றும் கூறி அதிமுக பெயரை சொல்லாமல் விமர்சித்தார். இது குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாகவே அதிமுகவை ஊழல் கட்சி என விஜய் பேசியிருந்த நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் எதிர்வினையாற்றி இருந்தனர்.
இந்நிலையில் இன்று அண்ணா நினைவு நாளில் மரியாதை செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''நடிகர் விஜய் வாங்கும் சம்பளம் வெள்ளையா? கருப்பா? கருப்பு எவ்வளவு? வெள்ளை எவ்வளவு? வரி எவ்வளவு செலுத்தி இருக்கிறார்? கருப்பு, வெள்ளை இப்படி எல்லாம் வாங்குவது சமூகத்திற்கு கேடு இல்லையா? உண்மையிலேயே கை சுத்தம் என்றால் வாங்கும் சம்பளத்தை வெளிப்படையாக இவ்வளவுதான் வாங்குகிறேன்; நான் வரி கட்டுகிறேன் என்று விஜய்யால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது.
காரணம் கருப்பு அதிகம் வெள்ளை குறைவு. அப்பொழுது வரி அதற்கும் குறைவு. இது வரி ஏய்ப்பு இல்லையா? அதனால் யார் யாரை விமர்சனம் செய்வது என்று விவஸ்த்தை வேண்டும். பக்கத்தில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா லாட்டரியில் செல்வம் குவித்தவர். அவரது வீட்டில் போய் விஜய் சாப்பிடுகிறார். பாவப்பட்ட எவ்வளவு பேருடைய ரத்தத்தை சுரண்டி கொழுத்தவர் வீட்டில் போய் விஜய் சாப்பிடுகிறார். சரி அப்படியே எடுத்துக் கொண்டாலும் இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி யாருடைய பணத்தில் நடக்கிறது லாட்டரி பணத்தில் தான் நடக்கிறது.
கரூரில் 41 உயிர்கள் அன்றைக்கு மிக வேதனைக்குரிய வகையில் பிரிந்தது. அப்போது இரண்டு தரப்பையும் நான் குற்றம் சொன்னேன். விஜய் மேலும் தப்பு இருக்கிறது. அரசு மீதும் தப்பு இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் ஒரு மூன்றாம் ஆண்டு கட்சி துவக்க விழாவில் டான்ஸ் ஆடுகிறார் என்றால் 41 குடும்பங்கள் எந்த அளவிற்கு மனக் கஷ்டத்தில் இருக்கும் என கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாதவர் விஜய்.
ஒரு கட்சியின் தலைவராக இருக்க அருகதை விஜய்க்கு கிடையாது. 41 குடும்பமும் விஜய்யின் டான்ஸை பார்த்தால் எவ்வளவு கஷ்டப்படும். அதைப் பற்றி ஏதாவது பேசி இருக்கிறாரா? அதைப்பற்றி எதுவும் பேசவில்லை'' என்றார்.
Follow Us