கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்த நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்த போது தான் குழந்தைகள், பெண்கள் என பலர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

உயிரிழந்தவர்களின் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள 04324 259306, 7010806322 (வாட்ஸ்அப்) உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இறந்தவர்கள் உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்பிலிருந்து இரங்கல் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் என நாட்டின் முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 30 உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த சம்பவத்தில் காயமடைந்து  சிகிச்சைப் பெற்று வந்த கரூர் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் கவின் (31) என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கரூர் வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் ராஜேந்திரன் மற்றும் கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், முன்னாள் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், ''விஜய் எப்படி ஒரு தலைவராக இருக்க முடியும். அப்பாவி மக்கள் இவ்வளவு பேர் இறந்து விட்டார்கள் எல்லோரும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் வந்து பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு போகிறார்கள். விஜய் இங்கேயே இருந்து ஆறுதல் சொல்லிருக்க வேண்டும்.

Advertisment

களத்திற்கு வந்து ஆறுதல் சொல்ல வேண்டும். 20 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு உயிரை வாங்க முடியுமா? குறைந்தபட்சம் நேரில் வந்து ஆறுதல் சொல்லலாம் அல்லவா. நீதிமன்றம் இது தொடர்பாக தானாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். இதில் ஏதோ ஒரு சதி நடந்திருக்கிறது. ஆளுங்கட்சியின் சதியா என்பது விசாரிக்கப்பட வேண்டும். மூன்று முறை கரண்ட் கட் ஆகி இருக்கிறது. விஜய் பேசும் போது அவருடைய மைக் ஒயரை கட் பண்ணி எடுத்து இருக்கிறார்கள். விஜய் பேச ஆரம்பிக்கும் போது பிரச்சனை வந்திருக்கிறது. காவல்துறை பாதுகாப்பு இல்லாததுதான்  இவ்வளவுக்கும்  காரணம்'' என்றார்.