போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. 

அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் நடிகர் கிருஷ்ணா நேற்று 2 மணியளவில் காவல் நிலையத்தில் ஆஜரானார். ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வைத்து சுமார் 22 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வீட்டிலும் சோதனை நடைபெற்றது. வீட்டில் எந்தவிதமான ஆவணங்களும், போதைப்பொருளும் சிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சமூக வலைத்தள கணக்கு மற்றும் வாட்ஸ் அப் சாட் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்தனர்.

நண்பர்களுக்குள்ளே கிருஷ்ணா ஒரு குறிப்பிட்ட 'கோட் வேர்ட்' மூலம் பேசியது தொடர்பான மெசேஜ்கள் அழிக்கப்பட்டு இருப்பதால் அதனை மீட்டு விசாரணை நடத்தினர். இந்நிலையில் போதைப்பொருள் வழக்கில் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். இதில் அவர் எவ்வாறு சிக்கினார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் வாங்குவதற்காக சென்னையைச் சேர்ந்த கெவின் என்ற நபரிடம் வாட்ஸ் அப்பில் உரையாடல் செய்ததாகவும், அதில் சில கோட் வேர்டுகளை பயன்படுத்தி பேசியதாகவும் கூறப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த வாட்ஸ் அப் உரையாடல்களை கிருஷ்ணா அழித்திருக்கிறார். அவற்றை மீண்டும் மீட்டெடுத்து போலீசார் சோதனை செய்ததில் நடிகர் கிருஷ்ணா தொடர்ச்சியாக கெவின் என்ற நபரிடம் போதைப்பொருளை வாங்கியதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது கிருஷ்ணா மற்றும் கெவின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.