Horse statue decorated with local garlands and paper flower garlands in pudukkottai
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் முன்பு 33 அடி உயரத்தில் பிரமாண்ட குதிரை சிலை ஒன்று வானில் தாவித் செல்லும் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. எதிரில் யானை சிலையும் அமைக்கப்பட்டிருந்தது. பல வருடங்களுக்கு முன்பு யானை சிலையை காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்றாலும் குதிரை சிலையை ஆற்று வெள்ளத்தாலும் அசைக்க முடியவில்லை. அதனால் மாசி மகத் திருவிழாவில் பிரமாண்ட குதிரை சிலையை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வது வழக்கம்.
ஒவ்வொரு வருடமும் மாசி மகத்தன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலின் சிறப்பே பிரமாண்ட குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப்பூ மாலைகளை பக்தர்கள் அணிவிப்பது தான். அதே போல பால்குடம், காவடி, கரும்பு தொட்டில்களும் நேர்த்திக் கடனாக பக்தர்கள் செய்து வருகின்றனர். மேலும், மாசிமகம் நாளில் 33 அடி உயரம் கொண்ட பிரமாண்ட குதிரை சிலைக்கு அதே உயரத்தில் கிராமத்தின் சார்பில் முதல் மாலை அணிவித்த பிறகு நேர்த்திக்கடன் உள்ள பக்தர்கள் லாரி, கார், வேன்கள் மூலம் பூ மாலை மற்றும் காகிதப் பூ மாலைகள் அணிவிப்பதும் மறு நாள் தெப்பத் திருவிழாவும் நடத்தப்படுகிறது.
கடந்த பல வருடங்களாக பிரமாண்ட குதிரை சிலைக்கு மாலைகள் அதிகமாக அணிவிக்கப்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பக்தர்களின் வசதிக்காகவும் கிராமத்தின் சார்பில் முதல் மாலையை ஒரு நாள் முன்னதாக அணிவித்து வருகின்றனர். அதே போல் நாளை (02-03-26) திங்கள் கிழமை மாசிமகம் என்றாலும் இன்றே ஆயிரக்கணக்கான மாலைகளுடன் வாகனங்கள் 4 பக்க சாலைகளிலும் அணி வகுத்து நிற்பதால் கிராமத்தின் முதல் மாலையாக பூ மாலையை சுவாமியின் சிறப்பு அபிசேகத்துடன் குதிரை சிலைக்கு அணிவிக்கப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/01/kai2-2026-03-01-23-03-17.jpg)
முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான மாலைகள் குதிரை சிலைக்கு குவிந்துள்ளது. இன்னும் நாளை மறுநாள் அதிகாலை வரை மாலைகள் அணிவிக்கப்பட உள்ளதால் சுமார் 4 ஆயிரம் மாலைகள் வரை குதிரை சிலைக்கு நேர்த்திக்கடனாக அணிவிக்கப்படலாம் என்கின்றனர். மேலும் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் மாலைகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டு காகிதப்பூ மாலைகள் மட்டுமே அணிவிக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே அன்னதான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலிசாரும் செய்துள்ளனர். சிறப்பு பேருந்து வசதிகளும், மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Follow Us