கட்டிலில் படுத்துத் தூங்கிய நபருக்குக் காலையில் நேர்ந்த கொடூரம்; பதைபதைக்கும் சம்பவம்!

103

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சியம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன், கர்நாடக மாநிலம் பெங்களூரில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, தனது சொந்த ஊரில் வசிக்கும் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக வந்து செல்வார் என்று கூறப்படுகிறது.

மகேந்திரனுக்கு,  நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு திருமணமாகி, அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். மூன்றாவது பெண் குழந்தைக்கு, விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அந்த இளைஞரும் தற்போது லட்சியம் கிராமத்தில் உள்ள மகேந்திரனின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, மகேந்திரன் தனது சொந்த ஊரான லட்சியம் கிராமத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், இவரது வீட்டின் அருகே உள்ள ராமர் கோவில் வளாகத்தில் நேற்றிரவு கட்டிலில் படுத்துத் தூங்கியுள்ளார். இன்று காலை பார்த்தபோது, அவர் தலையில் யாரோ கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மாதவன் மற்றும் சின்னசேலம் காவலர்கள், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சந்தேகத்தின் அடிப்படையில், அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் மூன்றாவது பெண் குழந்தைக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்குப் பின்னரே குற்றவாளி யார் என்பது தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

kallakurichi police
இதையும் படியுங்கள்
Subscribe