கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓமன் நாட்டில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் குறித்தான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஈரானில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டதாக, குறிப்பாகப் பலர் உயிர் இழந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் உட்பட அந்த பிராந்தியத்தில் உள்ள பல்வேறு அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.  

Advertisment

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று தொடங்கிய இந்த தாக்குதல் சம்பவம் இன்று வரை நீடித்து வருகிறது. இதன் நீட்சியாக, ஈரான் நீரிணையை மூடியதைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் தங்களின் பயணத்தைத் தொடர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அமெரிக்கக் கப்பல்கள் சில தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

Advertisment

இந்த நிலையில், இன்று (04-03-26) இலங்கை தெற்கு கடற்கரையில் ஈரானிய கப்பல் ஒன்று தாக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல், உலக அரங்கில் மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில், ஈரானிய கப்பல் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கை தெற்கு கடற்கரையில், ஈரான் கப்பலில் இருந்து அபாய சமிஞ்கை கிடைத்ததையடுத்து, அந்த பகுதிக்கு இலங்கை கடற்படை மீட்புக் குழுவை அனுப்பியுள்ளது. இந்த தாக்குதலில், கப்பலில் இருந்த 101 பேர் காணாமல் போனதாகவும், 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அந்த கப்பலில் இருந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை மற்றும் கப்பல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்தான விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தாக்குதலுக்குள்ளாகி மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து கிட்டத்தட்ட 30 பேர் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment