மதுரை ஆதீனம் திருச்சி நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் பயணித்த கார் உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், தன்னை திட்டமிட்டு கொலை செய்யச் சிலர் எச்சரித்து இருப்பதாகவும், குல்லா அணிந்த நபர்கள் தன்னை கொலை செய்வதற்கு முற்பட்டு தன்னை தாக்க முற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதாவது சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டபோது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் இந்த தகவலைத் தெரியப்படுத்தி இருந்தார். அதோடு அவரது ஓட்டுநரும் குல்லா அணிந்த நபர்கள் தங்களைத் தாக்கி கொலை செய்ய முற்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்த பேச்சு குறித்து சென்னை அயனாபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் இந்த வழக்கானது சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து இந்த புகாரின் பேரில் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், இரு வேறு சமூகத்திற்கிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் செயல்படுதல், பொதுத் தூய்மைக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்படி இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக்கூடாது என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் அமர்வில் இன்று (15.09.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில், “மதுரை ஆதீனம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் விதத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறை விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆதீனம் முரணாக பதிலளித்தார் . அதோடு இந்த விசாரணைக்கு மதுரை ஆதீனம் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் மதுரை ஆதீனம் தரப்பில் வாதிடுகையில், “காவல்துறை விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். காவல்துறையினர் சிலர் சீருடை இல்லாமல் விசாரணைக்கு வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் அப்படியே முடிந்திருக்கும். நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கக்கூடிய சூழலில் இந்த விவகாரத்தை காவல்துறையினர் அரசியல் நோக்கத்துடன் வழக்காக பதிவு செய்து பெரிதுபடுத்தி இருப்பதாக கருதப்படுகிறது.
எனவே இந்த வழக்கின் விசாரணை நிலை குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. அதோடு இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதுவரை மதுரை ஆதீனத்துக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.