கோவில் யானைகளை பிற யானைகளுடன் பழக வைக்கும், ‘யானைகள் புத்துணர்வு முகாம்’ நடைமுறை கொரோனா காலத்திற்கு பிற தொடங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் முரளிதரன் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ் குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று (13.01.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை தொடர்ந்த மனுதரர் முரளிதரன், “கோவில் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு பிற யானைகள் பழக வைத்து மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இந்த நடைமுறை கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அந்த திட்டம் துவங்கப்படவில்லை” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், “கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட யானைகளுக்கான புத்துணர்வு முகாமை மீண்டும் ஏன் தொடங்கக் கூடாது?.
இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வனத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. வனத்தில் இருந்து தாயை பிரிந்த குட்டி யானைகளை மீட்டு அவற்றை மீண்டும் காட்டில் விடும்போது, அந்த கூட்டத்தில் உள்ள மற்ற யானைகள் சேர்த்து கொள்ளப்படுவதாக தெரியவில்லை. அதனால் தாயை பிரிந்த குட்டி யானைகளை மீட்டு முகாமில் பராமரித்து அவற்றை ஒன்றாக சேர்த்து மீண்டும் காட்டில் விடலாம்” என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதிக்கு (06.02.2026) ஒத்தி வைத்துள்ளனர்.
Follow Us