ஆர்.டி.இ. எனப்படும் 2009ஆம் ஆண்டின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலமாக மாணவர் சேர்க்கை என்பது வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இதற்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கி வருகிறது. அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது நடைபெற்று வந்தது. அதாவது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார்ப் பள்ளிகள் 25% இடங்களை ஏழை மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். இத்தகைய சூழலில்தான் இந்த 25 % இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 17ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தனியார்ப் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு தனியார்ப் பள்ளிகள் முன்னேற்றச் சங்கம், தமிழ்நாடு தனியார்ப் பள்ளிகள் மாணவர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “நடப்பு கல்வி ஆண்டில் 25% இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்புகள் எதையும் தமிழக அரசு வெளியிடவில்லை. சில தனியார்ப் பள்ளிகள் 25% இடங்களை ஒதுக்கியுள்ளனர். சில தனியார்ப் பள்ளிகள் அனைத்து இடங்களையும் நிரப்பி விட்டனர். அதாவது மாணவர் சேர்க்கை முடிந்து 2ஆம் பருவம் தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு சுற்றறிக்கை பிறப்பித்தது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வில் இன்று (14.10.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் வாதிடுகையில், “கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்காததால் நடப்பாண்டில் தாமதம் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் 7,717 பள்ளிகளில் 81 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றுள்ளனர். எனவே அந்த மாணவர்களுக்கான கருதி, அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை வழங்கும் வகையில் மாணவர்களின் பட்டியல் கோரப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்கள் ஏற்கனவே செலுத்திய கல்விக் கட்டணத்தைத் திரும்பி வழங்க ஏதுவாகத்தான் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாகத் தனிப்பட்ட பள்ளிகள் சார்பில் தான் வழக்கு தொடர முடியும். தனியார்ப் பள்ளிகள் தொடர்புடைய சங்கத்தின் சார்பில் வழக்கு தொடர் முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட கொண்ட நீதிபதி, “மாணவர்களின் விவரங்களை அளிப்பதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 17ஆம் தேதியில் இருந்து, அக்டோபர் 31ஆம் தேதி வரை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. புதிதாக எந்த மாணவர்கள் சேர்க்கையும் மேற்கொள்ளக் கூடாது” என உத்தரவு பிறப்பித்துள்ளார்.