பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காலப்போக்கில் பெரிய அளவிலான பிரச்சனையாக உருவெடுத்தது. இதனால், இருவரும் எதிரெதிர் நிலையில் நிற்க, கட்சி நிர்வாகிகளும் இருவர் தலைமையிலும் இரு அணிகளாகப் பிரிந்து நின்றனர். பின்னர் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டனர். இதனால் கட்சி இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. இந்த நிலையில், அன்புமணி தலைமையிலான பாமக அணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. ராமதாஸ் தலைமையிலான பாமக அணி எந்த அணியில் இடம் பெறும் என்பது இதுவரை உறுதி செய்யப்படாமல் உள்ளது.
இதனிடையே, பாமகவிற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு குறித்தான கடிதத்தைத் தேர்தல் ஆணையம் அன்புமணியின் முகவரிக்கு அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பினர், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதில், பாமகவில் அன்புமணியின் தலைவர் பதவி கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், தற்போதும் அவர் பாமகவில் தலைவராக இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார். அதனால், அவரின் முகவரிக்குச் சென்ற கடிதத்தை ரத்து செய்து தங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதி மன்றம், மூன்று வாரங்களுக்குள் இதற்குப் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு வருகின்ற 24ஆம் தேதியன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மீண்டும் ஒரு புதிய மனுவினை ராமதாஸ் தரப்பினர் தாக்கல் செய்துள்ளனர். அதில், "பாமக என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியல்ல. அது ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சி. அதனால், கட்சித் தலைமையிலான விவகாரங்களில் தேர்தலை ஆணையம் தலையிட முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற வழக்கினை உரிமையியல் நீதி மன்றத்தில் ராமதாஸ் தரப்பினர் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள், "உரிமையியல் நீதிமன்றத்தில் இதே வழக்கைத் தாக்கல் செய்து விட்டு, பிறகு ஏன் உயர்நீதிமன்றத்திற்கு வந்தீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/20/judgement-2026-02-20-15-52-57.jpg)
அதே நேரத்தில், இந்த வழக்கு தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, "பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சியல்ல. அதனால், இக்கட்சியின் விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது. அவர்களுக்குள் சிக்கல் இருப்பின் அதனை உரிமையியல் நீதிமன்றத்திற்கு அவர்கள் அணுகலாம்" என்று தெரிவித்திருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு, ராமதாஸ் தரப்பினரை உரிமையியல் நீதிமன்றத்தை அணுக வலியுறுத்தி, அவர்கள் தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனு உட்பட இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Follow Us