முன்னாள் அமைச்சர் பொன்முடி ஒரு கருத்தரங்கில் பேசுகையில் சைவ வைணவம் குறித்தும், பெண்கள் தொடர்பாகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ் குமார் அமர்வில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி (22.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர், “இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தி முகாந்தரம் இல்லை என்று புகார் முடித்து வைக்கப்பட்டுவிட்டது. 

Advertisment

இது குறித்துச் சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது” எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “புகார்களில் முகாந்தரம் இல்லை என்று எந்த அடிப்படையில் காவல்துறை முடிவுக்கு வந்தது” எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த தலைமை வழக்கறிஞர், “கடந்த 1972ஆம் ஆண்டு அப்போதைய சமூக சீர்திருத்தவாதி தெரிவித்த கருத்துக்களையே முன்னாள் அமைச்சர் பொன்முடி தற்போது தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை முழுமையாகப் பார்த்தால் விவரங்கள் அனைத்தும் தெரியவரும்” என்று விளக்கமளித்தார். 

இதனையடுத்து நீதிபதி, “முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய அந்த பேச்சு அடங்கிய முழு வீடியோவையும், 1972ஆம் ஆண்டு அப்போதைய சமூக சீர்திருத்தவாதி பேசிய பேச்சு அடங்கிய விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஒத்தி வைத்திருந்தார். அதன்படி சைவ வைணவம் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய முழு வீடியோவை உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். இதனையடுத்து வீடியோ ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு விசாரிக்கப்படும் என்று நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு செப்டம்பர் 16ஆம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் அமர்வில் இன்று (16.09.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், “முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் மீது ஆரம்பக் கட்ட விசாரணை நடத்தப்பட்டு அதற்கான ஆதாரங்கள் இல்லாததால் அவை முடித்து வைக்கப்பட்டன. எனவே புகார்கள் முடித்து வைக்கப்பட்டதற்கு எதிராக மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் புகார்தாரர்கள் மனுத்தாக்கல் செய்யலாம் . அல்லது தனிநபர் புகார் செய்தால் நீதிமன்றம் விசாரிக்கலாம்” எனத் தெரிவித்தார். 

Advertisment

judgement

அதற்குப் புகார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகப் புகார் அளித்தவரிடம் விசாரணை நடத்தாமல் புகார்கள் முடித்து வைக்கப்பட்டது. மேலும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகத் தனிநபர் புகார் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வழக்குகளை விசாரிக்கக் கூடிய சிறப்பு நீதிமன்றத்தில் மாற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர். இவ்வாறு இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “ஒரு பொறுப்பான அமைச்சர் பதவியில் இருந்த பொன்முடி இது போன்ற பேச்சைத் தவிர்த்திருக்கலாம். இது போன்று ஒரு பொது இடங்களில் பேசும் பொழுது அவர் தனது பேச்சைக் கவனத்தோடு கையாள வேண்டும். மேலும் இந்த புகார் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் இருந்து முடித்து வைக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.