சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக பொது தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சௌந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (11.09.2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது தீட்சிதர்கள் தரப்பில் வாதிடுகையில், “கனக சபை மீது ஏறி தரிசனம் செய்யத் தீட்சிதர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் , அரசியல் சாசன பதவி வகிப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்து சமய அறநிலையத் துறை வழக்கறிஞர், “கனக சபை மீது ஏறி தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி அளித்து ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போது அதனை பொது தீட்சிதர்கள் தரப்பினர் ஏற்றுக்கொண்டார்கள். எனவே கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அளித்த உத்தரவைத் தீட்சிதர்கள் உத்தரவை மாற்ற முடியாது” என வாதிட்டார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது தொடர்பாக ஒரு எழுத்துப்பூர்வமான மனுவாகத் தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்பிற்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை மீண்டும் அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.