சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “அரசு பணத்தில் அரசு ஊழியர்கள் மூலம் செயல்படுத்தப்படும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரை வைப்பது தவறானது. அடுத்த ஆண்டு (2026) தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தனிப்பட்ட பிம்பத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் இந்த திட்டம் விளம்பரப்படுத்தப்படுகிறது.
தனியார் தன்னார்வலர்கள் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மருத்துவ ரீதியான தரவுகள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிரான திட்டம். எனவே நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை நிரந்தரமாக அழிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (14.08.2025) விசாரணை வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், “இதே போன்ற ஒரு வழக்கை ஏற்கனவே உச்சநீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது” எனத் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, “இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யப்படும்” எனத் தெரிவித்தார்கள். அதே சமயம் மனுதாரர் தரப்பில், “தன்னுடைய மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.