குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார் என்பதற்கான போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் கோயம்புத்தூர் எம்பியாக இருந்தவர். தற்போது மஹாராஷ்டிராவின் ஆளுநராகப் பொறுப்பில் உள்ளார். மக்களவை, மாநிலங்களவையில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இருக்கும் எண்ணிக்கை எதிர்க்கட்சி கூட்டணிக்கு இருக்கும் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கிறது. ஆகவே பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/17/a4910-2025-08-17-22-13-10.jpg)
பாஜகவின் இந்த அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், 'தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் பொது சேவைக்கும், மக்கள் மீதான அர்ப்பணிப்புமிக்க சமூக செயற்பாடுகளுக்கும் கிடைத்த மணிமகுடமாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தமைக்கு மாண்புமிகு பாரத பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டாவிற்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.