heart Photograph: (chennai)
மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு வருகிறது. மூளைச்சாவு அடைந்தவர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்தால் தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு அரசு மரியாதை உடன் கூடிய இறுதிச் சடங்குகள் செய்து வைக்கப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசு இந்த முயற்சியை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூரில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்ட சம்பவம் பாராட்டைப் பெற்று வருகிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவர் இதய நோய் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில் தஞ்சாவூரில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் நேற்று காலை மூளைச் சாவு அடைந்தார். அவருடைய இதயம் ஹெலிகாப்டர் மூலம் ஒன்றே கால் மணி நேரத்தில் அமைந்தகரையில் உள்ள டிஜி வைஷ்ணவா கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து போலீசார் உதவியுடன் இரண்டு நிமிடங்களில் அந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாற்று இதயம் தேவைப்பட்ட அந்த நபருக்கு இதயம் பொருத்தப்பட்டது. சென்னைக்கு ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் வந்துள்ளது இதுவே முதல்முறை என்கின்றனர் காவல்துறையினர். சுமார் ஒன்றரை மணி நேரத்தில் எந்தவித தடையும் இல்லாமல் மருத்துவர்களும், காவல்துறையினரும் திட்டமிட்டபடி மொத்ததையும் செய்து காட்டி அசத்தியுள்ளனர்.
Follow Us