
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா கடந்த மே 7ஆம் தேதி நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தது.
இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிற நிலையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன் முறையாக ஜம்மு காஷ்மீருக்கு இன்று (06-06-25) பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைக்கிறார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் செனாப் நதியின் குறுக்கே ரூ.1,400 கோடி செலவில் 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான ரயில்வே பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமாகக் கருதப்படும் இந்தப் பாலத்தைக் கட்ட சுமார் 30,000 டன் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதை (USBRL) திட்டத்தின் ஒரு பகுதியாக செனாப் பாலத்தின் கட்டுமானம் 2002 இல் தொடங்கி, ஆகஸ்ட் 2022 இல் நிறைவடைந்தது.
1,315 மீட்டர் எஃகு வளைவு மற்றும் கான்கிரீட் அமைப்பு, 530 மீட்டர் அணுகுமுறை பாலம் மற்றும் 785 மீட்டர் டெக் வளைவு பாலம் (வாகனங்கள் ஓடும் பாலத்தின் பகுதி) ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த பாலம், ஆற்றுப் படுகையில் இருந்து 359 மீட்டர் உயரமும், பாரிஸின் சின்னமான ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரம் கொண்டது. கடும் நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பாலம், 120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. செனாப் பாலத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கூற்றுப்படி, வளைவின் ஒட்டுமொத்த எடை 10,619 மெட்ரிக் டன் ஆகும். இந்த பாலத்தில் ரயில்கள் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த ரயில்வே வளைவுப் பாலம், ஜம்மு காஷ்மீரில் இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டத்தின் யு.எஸ்.பி.ஆர்.எல் (USBRL) ஒரு பகுதியாகும். உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என்று கூறப்படும் செனாப் பாலம், ஜெர்மன் நிறுவனமான லியோன்ஹார்ட், ஆண்ட்ரா அண்ட் பார்ட்னர் பால வளைவுகளை வடிவமைத்தல் மற்றும் வியன்னா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொறியியல் துறையின் சாதனையாக பார்க்கப்படும் இந்த பாலம் பூகம்பங்களையும், 40 கிலோ எடையுள்ள டிஎன்டி (TNT) வெடிப்பையும் தாங்கும்
இந்த பாலத்தை இன்று (06-06-25) காலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, மாதா வைஷ்ணோ தேவி கோயில் உள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் உட்பட, ரூ.46,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைப்பார். அதன் பின்னர், சவாலான நிலப்பரப்பில் தேசத்திற்கு சேவை செய்யும் இந்தியாவின் முதல் கேபிள்-ஸ்டாய்டு ரயில் பாலமான அஞ்சி பாலத்தையும் அவர் திறந்து வைப்பார்