WhatsApp number to report rain damage; Tamil Nadu Government Notification

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்று பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியிருந்தார்.

இந்த நிலையில், மழை பாதிப்பை தெரிவிக்க வாட்ஸ் அப் எண்ணைதமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பாக செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில், தமிழக அரசின் 8148539914 என்ற வாட்ஸ் அப் எண்ணில் மழை பாதிப்பு, உதவி தேவைகளை மக்கள் தெரிவித்து பயன்பெறலாம். மேலும்@tn_rescuereliefஎன்ற எக்ஸ் தள பக்கத்திலும்தங்களது குறைகளை தெரியப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.