vijay sethupathi

விஜய்சேதுபதி வரி ஏய்ப்பு செய்தாரா? அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்களா? இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி படத்தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த செக்கச்சிவந்த வானம் திரைக்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் செல்வனாக கொண்டாடப்படும் அவரது ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

வரி ஏய்ப்பு நடந்ததால்தான் இந்த சோதனை நடைபெற்றது என்று வருமான வரித்துறை வட்டாரத்திலும், வரி ஏய்ப்பு என்று ஏதும் இல்லை. இது வழக்கமான ஆய்வுதான் என்று விஜய்சேதுபதி தரப்பிலும் கூறப்பட்டு வந்த நிலையில், என்னதான் நடந்தது என்று விஜய்சேதுபதியே விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

’’நான் குடும்பத்துடன் லக்னோ சென்றிருந்தேன். நேற்று மதியம் தான் சென்னை திரும்பினோம்.

வீடு மற்றும் அலுவலகத்திற்கு வருமான வரித்துறையினர் வந்தது உண்மைதான். ஆனால் , சோதனை நடைபெறவில்லை. ஆய்வு செய்யத்தான் அதிகாரிகள் வந்தனர். என்னுடைய வீடு, அலுவலகம் மட்டும் இல்லாமல் என் சகோதரியின் வீடுகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

எந்த காலத்திலும் அரசை ஏமாற்றும் எண்ணம் எனக்கு இருந்தது இல்லை. வருமானத்தை நேர்மையாக கணக்கு காட்டி வரிகளை சரியாக செலுத்தி வருகிறேன்.

கணக்கு வழக்கு விவகாரங்களில் எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். சில ஆண்டுகளாக எனக்கு வரி விவரங்களை பார்த்துக்கொண்ட ஆடிட்டரால் வருமான வரியில் சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த குழப்பத்தை போக்கிக்கொள்ள வருமான வரித்துறையினர் வந்தனர். குழப்பம் தீர்ந்ததால் சென்றுவிட்டனர். ஆடிட்டரின் அலட்சியத்தினால் ஜிஎஸ்டி ஆய்வை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தொழிலில் இந்த அளவிற்கு அலட்சியத்துடன் செயல்பட்ட ஆடிட்டரை மாற்றிவிட்டேன்’’

Advertisment

என்று தெரிவித்தார்.