Skip to main content

சென்னை பெண்ணுக்கும் எச்.ஐ.வி. ரத்தம் - அறியாதவராகவா இருக்கிறார் விஜயபாஸ்கர்?

Published on 28/12/2018 | Edited on 28/12/2018

சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையைப் போல், சென்னையிலும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தம் செலுத்தியதன் மூலம் எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. 

 

v

 

சென்னை மாங்காட்டைச் சேர்ந்த அந்தப் பெண், கடந்த ஆகஸ்ட் மாதத்தில்,  நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ரத்தசோகை காரணமாக,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தியிருக்கின்றனர். பிறகு,  அவர் எட்டு மாத கர்ப்பிணியாக  இருந்தபோது ரத்தப் பரிசோதனை செய்திருக்கின்றனர். அப்போது எச்.ஐ.வி. தொற்று அவருக்கு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் கணவருக்கும் ரத்தம் சோதனை செய்தபோது.  எச்.ஐ.வி. தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டிருக்கிறாது.

 


இதுகுறித்து, அந்தப் பெண் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி டீன் ஆகியோருக்கு கடந்த நவம்பர் 2-ஆம் தேதி பதிவுத்தபால் மூலம் புகார் அனுப்பியிருக்கிறார். அரசுத் தரப்பிலோ, அந்தப் புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனாலும், அரசு மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஏ.ஆர்.டி. எனப்படும் கூட்டு மருந்து வழங்கி வருகின்றனர். 
செப்டம்பர் 15-ஆம் தேதி அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தைக்கும் எச்.ஐ.வி. தோற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, தாய்ப்பால் கொடுப்பதற்கு அந்தப் பெண்ணை அனுமதிக்கவில்லை. புட்டிப்பால் மூலம் அந்தப் பெண், தன் குழந்தையை வளர்த்து வருகிறார். 

 


இந்த விவகாரம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்..” என்று கூறியிருக்கிறார். நவம்பர் 2-ஆம் தேதியே புகார் அனுப்பப்பட்டு, கடந்த 4 மாதங்களாக அந்தப் பெண்ணுக்கு கூட்டு மருந்து வழங்கி வருவதை அறியாதவராகவா இருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்?

 


.எச்.ஐ.வி. பூதம் இன்னும் எந்தெந்த அரசு மருத்துவமனைகளில் இருந்து கிளம்பியிருக்கிறதோ? அரசு மருத்துவமனைகளில் ரத்தம் ஏற்றியவர்களெல்லாம் பீதியில் உள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிமன்றத்தில் புதிய மனு; விஜயபாஸ்கரின் பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
ed Petition seeking details of case registered against Vijayabaskar by Anti-Corruption Department

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.

அதேபோல விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  அந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று முன் தினம் (21.4.2024)  விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்டு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு  தாக்கல் செய்துள்ளனர்.  அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை காரணமாகவே விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீண்டும் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறாரா அதிமுக வேட்பாளர்?

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
AIADMK candidates nominated by Vijayabaskar may also be questioned

மாஜி அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் இன்று காலை முதல் மதுரை, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து 3 கார்களில் வந்துள்ள ஒரு பெண் அதிகாரி உள்பட 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் விஜயபாஸ்கரின் அப்பா மற்றும் அம்மா மட்டுமே இருப்பதால் இலுப்பூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து குவிந்துள்ள அதிமுகவினர் வீட்டின் முன்னால் நிற்கின்றனர்.

பாஜகவின் அராஜக போக்கால் இப்படி நடப்பதாக கூறும் அவரது ஆதரவாளர்கள், தேர்தலில் பதில் சொல்வோம் என்றும் கூறி வருகின்றனர். மாலை வரை சோதனை தொடரும் என்ற நிலையில் ஒரு காரில் சிலர் வெளியில் சென்றுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் வெளியில் சென்ற அமலாக்கத்துறையினரின் கார் எங்கே சென்றுள்ளது என்று தேடி வருகின்றனர்.

மேலும் ஏற்கனவே ரைடுகளில் சிக்கி வெளியில் உள்ள கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் மாஃபியா கரிகாலனின் சகோதரர் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மா.செ கருப்பையாவுடன் நெருக்கமாக உள்ள மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அவருக்கு அரசு ஒப்பந்தங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார் என்பதும் இப்போது அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் தங்கமணியை ஓரம்கட்டிவிட்டு எடப்பாடியிடம் கடுமையாக மல்லுக்கட்டி பாசறை கருப்பையாவுக்கு சீட்டு வாங்கிக் கொடுத்துள்ளார். இதேபோல மேலும் சிலருக்கு சீட்டு கிடைக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் விஜயபாஸ்கரிடம் தொடர்பில் உள்ள திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பாசறை கருப்பையா மற்றும் அவரது தம்பி கரிகாலன் வீடு, மேலும் சில வேட்பாளர்கள் வீடுகளுக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலிருந்து சிக்னல் கிடைத்தால் ரைடு நிச்சயம் என்கின்றனர் துறை சார்ந்தவர்களே.