
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி (23.12.2024) தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி டிசம்பர் 14ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார்,கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (32) என்பவரை கடந்தாண்டு டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்தனர். இந்த கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த எப்.ஐ.ஆரில் ஞானசேகரன் யாரோ ஒருவரை ‘சார்’ எனக் குறிப்பிட்டு பேசியதாகக் கூறப்பட்டது. அந்த சார் யார்? என அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்தன.
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்து, 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது. விசாரணையில் தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. அதில், ஞானசேகரன் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதும், அதை வைத்து பண்ணை வீட்டை வாங்கி அதில் வசித்து வந்ததோடு, இதேபோல் பல்வேறு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதே சமயம் இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவின் பரிந்துரை பேரில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, கடந்த மே 20ஆம் தேதி இந்த வழக்கின் அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகள் நிறைவடைந்தன. அதன் பின்னர் இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன் வைத்தனர். இவ்வாறு இருதரப்பின் இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனச் சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனையொட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசேகரன் அங்கிருந்து மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி ராஜலட்சுமி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ராஜலட்சுமி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் மீது 11 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று அதிரடி தீர்ப்பை வழங்கினார். மேலும், அவருக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார். தமிழக அரசின் காவல்துறை சார்பில், ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்ததால், என்ன தண்டனை வழங்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்த நிலையில், இன்று (02-06-25) காலை 10 மணியளவில் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் குறைப்பு இல்லாத சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி ராஜலட்சுமி அதிரடியாக உத்தரவிட்டார். அதோடு ஞானசேகரனுக்கு ரூ.90,000 அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். இது குறித்து நீதிமன்றம் தெரிவித்ததாவது, ‘குற்றவாளி ஞானசேகரனுக்கு சிறையில் எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது. 30 ஆண்டு சிறை தண்டனையை குற்றவாளி ஞானசேகரன் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது.
மாணவியை கடுமையாக தாக்கியதற்காக 7 ஆண்டுகள் சிறை, விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடந்ததற்காக 3 ஆண்டுகள் சிறை, மாணவியை கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தத்தற்காக 10 ஆண்டுகள் சிறை, கொலை மிரட்டலுக்கு 7 ஆண்டுகள் சிறை, தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதலுக்காக 3 ஆண்டுகள் சிறை என 11 குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக ஞானசேகரனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நன்னடத்தை காரணமாகவோ அல்லது வேறு எந்த காரணத்தினாலோ வெளியே வர முடியாதபடி 30 ஆண்டுகள் வரையும் ஞானசேகரன் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதே குறைப்பு இல்லாத சிறைத் தண்டனை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.